மட்டக்களப்பு ஆரையம்பதியில் ஆணின் சடலம் மீட்பு !



மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி குளம் பகுதியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 27) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆரையம்பதியை சேர்ந்த 57 வயதுடைய வீரக்குட்டி தவராஜா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஐந்து தினங்களாக குறித்த நபர் காணாமல் போயிருந்த நிலையில், குடும்பஸ்தர் ஒருவர் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதன்போது திருநீற்றுக்கேணி குளம் பகுதியில் காணாமல் போனவரது பாதணி இருப்பதை கண்டு குளப்பகுதியில் தேடியபோதே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் வலிப்பு நோயினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டவர் எனவும் மதுபோதைக்கு அடிமையானவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரியின் உத்தரவுக்கமைய காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுமணிமாறன் சம்பவ இடத்துக்கு விரைந்து, சடலத்தினை பார்வையிட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தினை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.