பண்டிகை காலத்தில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது : வர்த்தக அமைச்சர் !


எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிக்காமல் நியாயமான விலையில் வழங்குவதற்கு அரசாங்கத்திற்குத் திறன் இருப்பதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பண்டிகை காலம் நெருங்கி வருவதால், அனைத்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடி மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார்.

மக்காச்சோளம், உளுந்து போன்ற முட்டை உற்பத்திக்குத் தேவையான அனைத்துப் பொருட்களின் விலை குறைந்துள்ள போதிலும் முட்டை உற்பத்தியாளர்கள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக தெரிவித்த வர்த்தக அமைச்சர் நியாயமான விலையில் பொருட்களை வழங்க வாய்ப்பு கிடைத்தால் விற்பனையை அதிகரிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

மக்களின் நலனுக்காகவே முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுவதாகவும், தற்போதைய கோதுமை மா விலையை அடுத்த சில மாதங்களில் தக்கவைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.