சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடு செல்வதற்கு மட்டக்களப்பில் வீடு ஒன்றில் தங்கியிருந்த சிறுவர் பெண்கள் உட்பட 17 பேர் கைது!

 

(கனகராசா சரவணன்)  

மட்டக்களப்பில் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்துவந்த ஒருவர் உட்பட 17 பேரை நேற்று புதன்கிழமை (15) இரவு மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்திலுள்ள வீடு ஒன்றை சம்பவதினமான நேற்று இரவு 7 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலாக பொலிஸ் குழுவினர் சுற்றி வளைத்தனர்.

இதன் போது சட்டவிரோத ஆள்கடத்தல் மாபியாவைச் சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 16 பேரிடம் பணத்தை வாங்கி கொண்டு மட்டக்களப்பு கடலில் இருந்து படகு மூலம்  அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து அவர்களை அழைத்துவந்து மட்டக்களப்பு  சுவிஸ்கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று அங்கு கடந்த ஒரு மாதகாலமாக தங்கவைத்துள்ளதாக  பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதில்  3 சிறுவர்கள் 3 கர்ப்பிணி பெண்கள் உட்பட 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு வீடு வாடகைக்கு பெற்றுக் கொடுத்து உதவிபுரிந்துவந்த ஒருவர் உட்பட 15 பேரை கைது செய்ததுடன் படகு மூலம் செல்வதற்காக கொள்வனவு செய்யப்பட்டு வைத்திருந்த சமபேசா, பிஸ்கற் பக்கற்கள் சீPனி போன்ற பொருடக்கள் மற்றும் ஆடைகளையும் மீட்டு ஒப்படைத்துள்ளதாகவும். இவர்களை இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குறற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.