17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயாருக்கு டிக்டொக்கில் அச்சுறுத்தல் : காதலனும் அவரது நண்பனும் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 17 சிறுமி  ஒருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயாருக்கு டிக்டொக்கில்  அச்சுறுத்தல் விடுத்த சிறுமியின் காதலன் உள்ளிட்ட இருவரை சனிக்கிழமை (25) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் சிறுவன் ஒருவன் காதலித்து வந்துள்ளார்.

இதனை அறிந்த சிறுமியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, 17 வயதுடைய காதலனும் அவனது நண்பனும் சேர்ந்து வாள் மற்றும் பஞ்ச சக்கரம் கொண்ட கூரிய ஆயுதத்துடன் படம் எடுத்து அதற்கு வீரம் கொண்ட பாடல்களை பதிவு செய்து கையடக்க தொலைபேசியில் டிக்டொக்கில் பதிவிட்டு சிறுமியின் தாயாரை அச்சுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து, சம்பவதினமான  சனிக்கிழமை காலையில் 17 வயதுடைய இருவரையும பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின்னர் வாக்கு மூலம் பதிவு செய்து எச்சரித்து மாலையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.