நெற் செய்கையாளர்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்க 36 ஆயிரம் மெட்ரிக் தொன் உரம் விவசாய அமைச்சிடம் கையளிப்பு!

 

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரமைப்பின் (USAID) நிதியுதவில் வழங்கப்பட்ட 36 000 மெட்ரிக் தொன் உரத்தை சிறுபோகத்திற்காக ஐ.நா. உணவு , விவசாய ஸ்தாபனம் விவசாய அமைச்சிடம் கையளித்துள்ளது.

ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங்களுக்கிடையிலான சிறுபோகத்திற்கும் , அதற்கு அடுத்து வரும் பயிர்செய்கைப் போகங்களிலும் ஒரு மில்லியனுக்கும் அதிக நெல் விவசாயிகளுக்கு இந்த உரம்  இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. 

நெற் பயிர் செய்கை மேற்கொள்ளப்படும் நிலத்தின் அளவு மற்றும் அதற்கு தேவையான அளவின் அடிப்படையில் உரம் வழங்கப்படும்.

விவசாயிகள் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இந்த உதவிகள் ஆதரவளிக்கும் என்றும் , இதனை வழங்கியமைக்காக நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

உரத்தை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் , 'விவசாயிகளின் அரிசி உற்பத்தியை அதிகரித்து , நாட்டின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய கடுமையான முயற்சி செய்யும் இந்த சந்தர்ப்பத்தில் 45 000 தொன்னுக்கும் அதிக உரம் கொண்டு வரப்பட்டுள்ளது.

75 ஆண்டுகளாக முன்னேற்றத்திலும் , நெருக்கடியின் ஊடாகவும் இலங்கை மக்களுக்கு ஆதரவாக அமெரிக்க மக்கள் நின்றுள்ளதோடு , எங்களின் நல்லெண்ணத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து வெளியிடுகையில் , 

இந்த உதவியின் மூலம் எதிர்வரும் அறுவடைப் பருவங்களில் விளைச்சல் சீராக மேம்படும் என்று நம்புகின்றோம். அரிசி இறக்குமதியில் தங்கியிருப்பதை குறைத்து , இலங்கை நெல் விவசாயிகளை மேலும் வலுவூட்டுவதே எமது இறுதி நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.