டயானா கமகேவின் கடவுச்சீட்டு தொடர்பான ஆவணங்கள் காணாமல் போயுள்ளன : சிஐடி!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

டயானா கமகே குடிவரவுத் திணைக்களத்திற்கு வழங்கிய பிறப்புச் சான்றிதழின் அசல் நகல் கிடைக்காத பட்சத்தில் கூறப்பட்ட ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் எம்.எல்.ஏ அறிக்கையை பெற்றுக்கொள்ளும் வரை இந்த வழக்கு தொடர்பாக எவ்வித சமர்ப்பணமும் செய்ய முடியாது என குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஏ.எஸ்.பி சானக டி சில்வா நீதவானிடம் அறிவித்தார்.

மேலும், வழக்கு தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வாக்குமூலங்களின் பிரதிகளையும் அடுத்த அழைப்புத் திகதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது கடவுச்சீட்டை இதுவரை தனது திணைக்களத்திடம் ஒப்படைக்கவில்லை எனவும், இது தொடர்பில் தேவையான உத்தரவுகளைப் பெற்றுக் கொள்வதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் தலையிடுமாறு சட்டமா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்தல் விடுக்கப்படும் என நீதவான் குறிப்பிட்டார். மேலதிக விசாரணைகளை மார்ச் 23ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.