குப்பி விளக்கு சரிந்து தீ பற்றியதில் குழந்தை உயிரிழப்பு!

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் குப்பி விளக்கு சரிந்து விழுந்து தீ பற்றியதில் 06 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 

விசுவமடு பகுதியைச் சேர்ந்த கஜீபன் பிரசாத் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. 

விசுவமடுவில் உள்ள வீட்டில் கடந்த 23 ஆம் திகதி இரவு தாயுடன் குழந்தை உறங்கிக்கொண்டிருந்த வேளை வீட்டின் வெளியே யானைகளின் சத்தம் கேட்டதால், தாய் வீட்டின் வெளியே சென்று பார்த்த போது, குழந்தை படுக்கையில் உருண்டு, குப்பி விளக்கினை தட்டி விழுத்தியுள்ளது. 

அதனை அடுத்து ஏற்பட்ட தீ பரம்பலில் குழந்தை சிக்கி , தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளது. குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (30) சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.