மாளிகைக்காடு மையவாடி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு; ரஷ்யா பல்கலைக்கழக உயர்மட்ட குழு விஜயம்! புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்து !

(நூருல் ஹுதா உமர்)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அதனூடாக பல்கலைக்கழகத்தின் தரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்;  பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர், எம்.எஸ்.ஏ. றியாட் ரூளி எடுத்துவரும்  பரந்துபட்ட முயற்சியின் காரணமாக, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம்; சர்வதேச ரீதியாக செயற்படுகின்ற பல்கலைக்கழகங்கள், கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த அமைப்புக்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு, அவற்றினை பயனுள்ளவகையில் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருவின்றது.

அந்த வகையில் கடந்த 2022.12.29 ஆம் திகதி ரஷ்யாவின் UI. Y. Yakovlev Chuvash State Pedagogical பல்கலைக்கழகத்துடன் இணையவழி ஊடாக உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இவ்வுடன்படிக்கைக்கான முன்னெடுப்புக்களையும் தலைமைத்துவத்தையும் ரஷ்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்  பேராசிரியர் ஜனித்த ஏ லியனகே தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த ரஷ்யாவின் UI. Y. Yakovlev Chuvash State Pedagogical பல்கலைக்கழகத்தின் உயர்மட்ட குழுவினர் 2023.03.17 ஆம் திகதி பல்கலைக்கழகத்துக்கு நேரடியாக வருகைதந்து தங்களது பல்கலைக்கழகம் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறியதுடன் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டனர்.

ரஷ்யாவின் UI. Y. Yakovlev Chuvash State Pedagogical பல்கலைக்கழகத்தின் சார்பில் Professor Vladimir Nikolaevich Ivanov, Acting Rector ,Senior Lecturer Igor Vladimirovich Kozhanov Vice Rector  for scientific and innovative work , Mr. Kirillov Alexander Alekseevich, head of department of scientific and innovative work ஆகியோர்வருகை தந்திருந்தனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் உபவேந்தர் பேராசியர் றமீஸ் அபூபக்கர் மற்றும் UI. Y. Yakovlev Chuvash State Pedagogical பல்கலைக்கழகத்தின் சார்பில் Professor Vladimir Nikolaevich Ivanov, Acting Rector ஆகியோருக்கிடையில் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர், எம்.எஸ்.ஏ. றியாட் ரூளியின் வழிகாட்டலில் ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இந்நிகழ்வின்போது பதில்  பதிவாளர் எம்.ஐ. நௌபர், நூலகர் எம்.எம்.றிபாவுடீன் மற்றும் பீடாதிபதிகளான பேராசிரியர் எம்.எம்.பாஸில், பேராசிரியர் எம்.ஏ.எல்.அப்துல் ஹலிம், கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட், கலாநிதி எஸ்.சபீனா எம்.ஜி.எச்., கலாநிதி எம்.எச்.ஹறுன், பதில் பீடாதிபதி பேராசிரியர் அஹமட் சர்ஜூன் றாசிக்   உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இடம்பெற்ற  புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் கற்றல், கற்பித்தல், ஆய்வு மற்றும் புத்தாக்கத் துறைகளில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் பயனடைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது ஆசிரிய-மாணவ பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள், ஆய்வு மாநாடுகள், ஆய்வு வெளியீடுகள், சான்றிதழ் மற்றும் டிப்ளோமாக பாடநெறிகள், ஆசியர் மற்றும் மாணவர் பயிற்சிகள் உள்ளிட்ட பல ஒன்றினைந்த வேலைத் திட்டங்களை துரிதகதியில் நடைமுறைப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இதுபோன்ற புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. இதன்படி ரஷ்யா, துருக்கி, மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் எதிர்வரும் காலங்களில்  மேலும் பல புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

பல்கலைகழகத்துக்கு வருகைதந்த ரஷ்யாவின் பல்கலைக்கழக உயர்மட்டக்குழுவினர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்கும் விஜயம் செய்து அங்குள்ள நிலவரங்களை அறிந்து கொண்டதுடன் குறித்த பீடங்களின் பீடாதிபத்திகள் உள்ளிட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டனர்.

உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கிடையே ஞாபாகப் பொருட்களும் பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது.