ஜனாதிபதி அனுப்பிய பகிரங்க கடிதம்!

இலங்கையில் நிலவும் கடன் நெருக்கடியை தீர்த்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க முழு வெளிப்படைத்தன்மையை கடைபிடிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் வெளிநாட்டு கடன் வழங்குநர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடன் வழங்குனர்களுக்கு பகிரங்க கடிதமொன்றில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இருதரப்பு மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுக்கு இடையிலான பரஸ்பர ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் கடன் நெருக்கடியைத் விரைவில் தீர்ப்பதற்காக இலங்கையுடன் சாதகமாகச் செயற்படுமாறு கடன் வழங்குநர்களிடம் ஜனாதிபதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இருதரப்பு கடன் வழங்குனர்களுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் நியாயமான பொது இணக்கப்பாட்டிற்கு தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை எதிர்வரும் 20ஆம் திகதி கூடிய பின்னர், எதிர்ப்பார்த்த இலக்கை எட்டுவதற்கு அவர்களின் உடன்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கு விடுக்கப்பட்ட கடிதம் தொடர்பில் தெஹியோவிட்ட பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.