உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு!

340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று((19) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. 

29 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று(19) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. 

நாட்டில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்ற நிலையில் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேச சபை, காலம் தாமதித்து உருவாக்கப்பட்டதால் குறித்த பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று(19) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவில்லை. 

இன்று(19) நள்ளிரவின் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக செயற்பாடுகள் ஆணையாளர் மற்றும் பிரதேச சபை செயலாளருக்கு உட்படும் என மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனங்களை மீள கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.