பொருளாதாரத்தில் சாதகமான விளைவை அரசாங்கம் எதிர்பார்க்கிறது : இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியை மத்திய வங்கியும் அரசாங்கமும் செயற்கையாக வலுப்படுத்துவதாக சில தரப்பினர் குற்றம் சுமத்திய போதிலும், ரூபாவின் பெறுமதியானது தேவை மற்றும் வழங்கல் என்பவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தெஹியோவிட்டவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெளிநாட்டு கையிருப்பில் மத்திய வங்கி இன்னும் பலவீனமான நிலையில் இருந்தாலும், குறைந்தபட்சம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களையாவது கையிருப்பில் வைத்திருக்க முயற்சிப்பதாக அவர் கூறினார்.

அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியத்தின் நிதியைப் பெற்ற பின்னர் பொருளாதாரத்தில் சாதகமான விளைவை அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றார்.

இதற்கிடையில், மார்ச் 20 அன்று நடந்த IMF வாரியக் கூட்டத்திற்குப் பிறகு, நான்கு வருட அமெரிக்க டாலர் 2.9 பில்லியன் திட்டமான முக்கியமான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) முதல் தவணையைப் பெறுவதற்கான விளிம்பில் இலங்கை உள்ளது.