சூட்சுமமான முறையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது!



நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவர் கொழும்பு தெற்கு ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரவளை, நுவரெலியா, ஹப்புதளை, கிருலப்பனை, இரத்மலானை மற்றும் பிலியந்தலை போன்ற பகுதிகளில் நபர் ஒருவர் கையடக்க தொலைபேசி மூலம் பணம் பெற்று போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக கொழும்பு தெற்கு ஊழல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன்படி, குறித்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 31 வயதுடைய நபர் கிருலப்பனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை பொருளை கொள்வனவு செய்பவர் பணத்தை செலுத்திய பின்னர் அதனை விற்பனை செய்பவர் போதைப்பொருளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து பின்னர் அந்த இடத்தை புகைப்படம் எடுத்து அதனை வாட்ஸ் அப் மூலம் கொள்வனவு செய்பவருக்கு அனுப்பி அதனை பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கையடக்கத்தொலைபேசி பரிசோதனை உட்படுத்திய போது குறித்த நபர் மற்றுமொரு நபரிடமிருந்து போதைப்பொருள் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் போதைப் பொருளை கொள்வனவு செய்வதற்கு தயாராக இருந்த தரப்பினருக்கு விற்பனை செய்வதற்காக தம்வசம் வைத்திருந்த சுமார் 1,450 ஹெரோயின் போதைப் பொருள் அடங்கிய பொதிகளும், சந்தேக நபர் மூலம் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறியொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு தெற்கு ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.