களுவாஞ்சிக்குடியில் வீடு வாடகைக்கு தேவை என வீடு ஒன்றிற்குள் உள்நுழைந்த கொள்ளையர்கள் பெண்ணை தாக்கி தங்க நகைகள் கொள்ளையிட்ட சம்பவம் !

வீடு வாடகைக்கு தேவை என வீடு ஒன்றிற்குள் உள்நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளையர்கள் அங்கு தனிமையில் இருந்த பெண்ணை அடித்து தாக்கிவிட்டு அவரிடமிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் நேற்று முன்தினம் (7) பட்டப்பகலில் மட்டு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் காயமடைந்த பெண் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஒந்தாச்சிமட பிரதேசத்தில் சம்பவதினம் (07) பிற்பகல் 2 மணிக்கு வீட்டில் இருந்து கடைக்கு சென்று பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பி, வீட்டில் தனியாக இருந்த நிலையில் அங்கு 3 இளைஞர்கள் சென்று வீடு ஒன்று வாடகைக்கு தேவை என கேட்டு அந்த பெண்ணிடம் கதை கொடுத்துக் கொண்டனர்.

இதனையடுத்து திடீரென பெண் மீது தாக்குதலை அந்த கொள்ளைக்குழு நடாத்திவிட்டு அவரின் கழுத்தில் இருந்த சங்கிலி மற்றும் கையில் இருந்த காப்பு என்பவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்த நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை அயலவர்கள் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததுடன் இந்த கொள்ளைச் சம்பவத்தையடுத்து அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.