மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களது நலன் தொடர்பில் ஆராய்வு : மாவட்ட செயலகத்தில் மீன்பிடி அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்!!



(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
(சரவணன்)

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களது நலன் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (10) திகதி இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்  கலந்துகொண்டிருந்ததுடன், மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் தொடர்பாக இதன்போது மீன்பிடி அமைச்சருக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.

இதன் போது மாவட்டத்தில்   மீன் பிடி தொழில் ஈடுபடுபவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு கடற்றொழில் அமைச்சரினால்    தீர்வுகள்  மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் சட்டவிரோத மின்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கும், கடல்சார் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மாவட்டத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி மீன் பிடித்துறையில் உச்சக்கட்ட  பயனைபெற வேண்டும் என இதன் போது இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் கருத்து  தெரிவித்துள்ளார்.

வாகரை பிரதேச செயலக பகுதியில் உள்ள  வட்டவான் பிரதேசத்தில்  மேற்கொள்ளப்படும் இறால் வளர்ப்பு தொடர்பாக இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அமைச்சரினால் பல்வேறு ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் பெருமளவு களப்பு காணப்பட்டாலும்  மீன் உற்பத்தி குறைவாக மேற்கொள்ளப்படுகின்றதை சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் பண்னை முறையில்  மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தினையும் இதன் போது வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.