உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருக்கடி : பிரதமரை சந்திக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு!



உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்ந்தும் நெருக்கடியாகவே காணப்படுகின்ற நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் திங்கட்கிழமை (10) பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்திக்கவுள்ளனர்.

தவிர்க்க முடியாத காரணிகளால் கடந்த வாரம் பிரதமருடனான சந்திப்பு இடம்பெறவில்லை என்பதால், இவ்வாரம் நிச்சயம் குறித்த சந்திப்பு இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பிரதமரை சந்திக்கவுள்ளதாக கூறப்பட்ட போதிலும், அவ்வாறு எந்தவொரு சந்திப்பும் இடம்பெறாமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாளை மறுதினம் பிரதமருடன் நிச்சயம் சந்திப்பு இடம்பெறும். கடந்த வாரம் தவிர்க்க முடியாத காரணிகளால் சந்திப்பு இடம்பெறவில்லை.

இந்த சந்திப்பின்போது நிதி நெருக்கடியின் காரணமாக எம்மால் அடுத்த கட்டமாக எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றமை தொடர்பில் பிரதமருக்கு தெளிவுபடுத்தப்படும்.

அதற்கமைய எடுக்கப்படும் முடிவுகளுக்கமையவே வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள், தபால் மூல வாக்கெடுப்பு உள்ளிட்டவை தொடர்பில் தீர்மானிக்க முடியும்.

இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் வருகிற செவ்வாய்க்கிழமை இடம்பெறும்.

இதன்போது தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முதலில் கடந்த மார்ச்சில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு, பின்னர் ஏப்ரல் வரை காலம் தாழ்த்தப்பட்டது.

இம்மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், தமக்கான நிதி திறைசேரியினால் வழங்கப்படாமையின் காரணமாக இந்த திகதியிலும் தேர்தலை நடத்த முடியாது என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், இரண்டாவது முறையாகவும் கால வரையறையின்றி தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டுள்ளமையால், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், இரு வாரங்கள் கடந்துள்ள போதிலும், பிரதமருக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் இதுவரை சந்திப்பொன்று இடம்பெறவில்லை.

கடந்த வாரம் இந்த சந்திப்பு இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டிருந்த போதிலும், கடந்த வாரமும் சந்திப்பு இடம்பெறவில்லை.

இந்நிலையிலேயே நாளை மறுதினம் திங்கட்கிழமை நிச்சயம் பிரதமருடனான சந்திப்பு இடம்பெறும் என்று அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.