(சங்காரவேல் பவுண்டேசன் )
முல்லைத்தீவு மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மட்டக்களப்பை பூர்விகமாக கொண்ட அரசாங்க அதிபர் திரு . கதிர்காமத்தம்பி விமலநாதன் அவர்கள் (20/05/23) ,இன்றுடன் அரச நிர்வாக சேவையில் ஒய்வு நிலை அடைகின்றார். இவர் ஒரு திறமை வாய்ந்த மாவட்ட நிர்வாக தலைவராகவும் , நிறைந்த மனிதாபிமானமும் சாதுவான சுபாவம் , எளிமையாக அனைத்து தரப்பு மக்களிடமும் பழக்கக்கூடிய தன்மையும் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட ஆற்றலும் அனுபவமும் தன்னகத்தே கொண்ட ஒரு பெருந்தகையாவார்.நொச்சிமுனை கல்லடி-உப்போடை மட்டக்களப்பில் பிறந்த அமரர்கள் கதிர்காமத்தம்பி செல்லத்தங்கம் தம்பதிகளின் 8வதும் கடைசி மகனாவார். இவர் தன்னுடைய ஆரம்ப கல்வியை விவேகானந்த மகளிர் வித்தியாலயத்திலும், அதனை தொடர்ந்து இடை நிலை உயர்தரம் வரை மட்டக்களப்பு சிவானந்த மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார.; பாடசாலை காலப்பகுதியில் இவர் தன்னுடைய கல்வியிலும் மற்றும் விளையாட்டுக்களிலும் துறையிலும் மிளிர்ந்த மாணவனாகவும் திகழ்ந்தார். தொடர்ந்து க.பொ.த கணித பிரிவில் நல்ல பெறுபேறுகளை பெற்று கிழக்கு பல்கலைக்கழத்தில் பௌதிக விஞ்ஞானத்தில் கற்று தனது பட்டப்படிப்பை; பூர்த்தி செய்தார்.
பட்டம் பெற்று வெளியேறிய இவர் சிறிய காலம் ஆசிரியராக புனித மிக்கல் கல்லூரி மட்டக்களப்பு (உயர்தர கணித ஆசிரியர்) பணியாற்றினார். தொடர்ந்து அகில இலங்கை நிருவாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றார். தனது சேவைக்காலத்தில் ஆரையம்பதி , வவுணதீவு பிரதேச செயலாளராக மிக நீண்ட காலம் குறிப்பாக போர் காலப்பகுதியில் சிறப்பாக கடமையாற்றினார். பின்னர் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றியுள்ளார்.
இறுதியாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றி இன்றுடன் ஓய்வு பெறுகின்றார். குறிப்பாக முல்லைதீவு மாவட்டத்தில் மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட ஒருவர் மாவட்ட அரச அதிபராக கடமையாற்றியது மிகவும் சவாலான விடயமாகும். இலங்கையில் ஏற்பட்ட கோவிட், பாரிய பொருளாதார நெருக்கடி போன்ற காலப்பகுதிகளில் மாவட்டத்தைத் தலைமை தாங்கி வழி நடாத்தி , முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சகல வகுப்பு மக்களையும் திணைக்களங்களின் தலைவர்கள் அடங்கலாக நன்மதிப்பையும் பெற்ற ஒருவராகவும் மற்றும் மட்டக்களப்பு மண்ணிற்கும் பெருமை சேர்க்கும் வகையிலும் இவருடைய சேவைக்காலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்தது பெருமை சேர்க்கும் விடயமாக அமைந்துள்ளது.
வடக்கு கிழக்கு பகுதியில் கிராமிய மட்டத்தில் குறிப்பாக கஷ்டபிரதேசம் அதிகஷ்ட பிரதேசம் மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கோடு பல கல்வித் திட்டங்களை மேற்கொண்டு வரும் சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் செயற்பாட்டை முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் முன்னெடுத்துச் செல்ல இவரது ஒத்துழைப்பு நிறையவே கிடைக்கப் பெற்றுள்ளது.
இவரின் முன்னெடுப்பினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு வலயங்களில் மிகவும் கஸ்ரப் பிரதேசப் பாடசாலைகள் இலண்டன் சிவன் கோயில் நிதியளிப்பிலும், சங்காரவேல் பவுண்டேசன் நிதியளிப்பிலும் கல்விச் செயற்பாடுகள் விமலநாதன் அவர்களின் வழி நடாத்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இரு கல்வி வலயங்களிலும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைததமைக்கு சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பினர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
அவருடைய வேலை பழுக்கும் மத்தியிலும் இந்த மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கு இக்குழுவினருடன் பயணம் செய்து நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்து அவரின் பரிந்துரைக்கு அமைய கணித விஞான கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கோடு பத்து லட்சம் நிதியை வழங்கி செயற்திட்டம் நடைபெறுகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட மக்கள் இவர் மேல் கொண்டுள்ள நன்மதிப்பையும் இவர் இம் மாவட்ட மக்களில் கொண்டு அக்கறையும் நாம் இவரோடு பயணித்த போதும் களத்தில் எமது வேலைப்பாடுகளை மேற்கொண்ட போதும் உணரக் கூடியதாக இருந்தது.
அரச நிர்வாக சேவையில் இன்றுடன் ஓய்வுபெறும் விமலநாதன் அவர்கள் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளுடனும் இருக்க வேண்டும் . மேலும் இவருடைய சேவை வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு தொடர வேண்டும் என்று வேண்டி நிற்கின்றோம்
- சங்காரவேல் பவுண்டேசன் - மட்டக்களப்பு
பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் |
கணித விஞான கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கோடு பத்து லட்சம் நிதியில் செயற்திட்டம் |
ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் |
முல்லைத்தீவு பாலி நகர் |
முல்லைத்தீவு ஒளிரும் வாழ்வு நிறுவனத்தில் |