சிங்கப்பூரில் உயிரிழந்த இலங்கை பெண் : பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது!

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 8ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இலங்கை பெண்ணின் உடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் உடலம் நேற்றிரவு இலங்கை கொண்டு வரப்பட்ட நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, குறித்த பெண் உயரமான பகுதியில் இருந்து விழுந்ததனால், தலை மற்றும் உடலின் ஏனைய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், இதனாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கொடுவ பகுதியைச் சேர்ந்த நதிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், இச்சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த பணியகத்தின் தலைவர் ஏ.ஏ.எம்.ஹில்மி அஷீஸ் தெரிவித்துள்ளார்.