சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை மாணவன் மீது தாக்குதல் : கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மாணவர்கள் கைது!


கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு இம்முறை தோற்றிய மாணவனை சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை வயிற்றின் கீழ்ப் பகுதியில் தாக்கிய சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் கல்வி கற்கும் அதே பாணந்துறை பாடசாலையின் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 5 மாணவர்களே இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கும் அவரது உடலின் சிறுநீர் பாதையில் இருந்து இரத்தம் வெளியேறியதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்த முறைப்பாடு தொடர்பில் மேலும் விசாரணை நடத்தவேண்டிய அவசியமில்லை என்ற முறைப்பாட்டாளரின் கோரிக்கையின் காரணமாக கைதுசெய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.