
அரங்கேற்ற விழாவினைக் கண்டுமகிழ்வதற்கென மழையினையும் பொருட்படுத்தாது சிறுவர்கள், இளைஞர்கள்,முதியோர்கள் என அப்பிரதேசத்தினைச் சேர்ந்த மக்களும்,அயற்கிராமத்தினைச் சேர்ந்தவர்களும் வருகை தந்து கூத்தாற்றுகையின் ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை பார்த்திருந்ததுடன் சிறுவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறிச் சென்றனர்.
இந்நிகழ்விற்கு கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் தலைவர் கலாநிதி வ.இன்பமோகன் அவர்களும்,நுண்கலைத் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதிசி.ஜெயசங்கர் அவர்களும்,நுண்கலைத் துறையின் விரிவுரையாளர் திருசு.சந்திரகுமார்,சுவாமி விபுலானந்தர் அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர் திருத.விவேகானந்தராசா மற்றும் நுண்கலைத்துறையின் சிறப்புக்கற்கை மாணவர்கள், கூத்தார்வலர்கள், இப்பிரதேச மக்கள் எனப் பலரும் வருகை தந்திருந்தனர்.
இத்தொடர் ஆற்றுகைச் செயற்பாட்டின் மற்றுமொருகட்டமாக இன்று (27.09.2014)காலை 09.00 மணி தொடக்கம்'வீட்டுக்குவீடு'கூத்தாடும் நிகழ்வுஆரம்பமானது.
முதலில் சித்தாண்டிசித்திரவேலாயுத சுவாமி ஆலய முற்றத்தில் ஆரம்பமாகித் தொடந்து இப்பிரதேசக் கிராமசேவகர் இல்லத்திலும் ஆற்றுகைசெய்யப்பட்டது.
பின்னர் கூத்தாற்றுகையில் பங்குகொண்ட கூத்துக்கலைஞர்களின் வீட்டு முற்றத்தில் கூத்தின் சில வரவுக்காட்சிகள் ஆடிக்காட்டப்பட்டது. அத்துடன் அங்கிருந்த பார்வையாளர்களது விருப்பத்திற்கிணங்க அவர்கள் கூறிய ஆட்டமும் ஆடிக்காட்டப்பட்டது. இந்நிகழ்விலே ஒவ்வொரு கூத்தர்களதும் இல்லத்திலேஅங்கு கூடியிருந்த அனைவருக்கும் உபசரிப்புக்களும் இடம்பெற்றது. காலைவேளை ஆரம்பிக்கப்பட்ட வீட்டுக்கு வீடு கூத்தாடுகின்ற நிகழ்வானது நண்பகல் 12. 45 மணியளவில் முடிவடைந்தது. இதன்போதும் சிறுவர்கள்,பெண்கள்,முதியோர்கள், இளைஞர்கள் எனப் பலரும் பின் தொடர்ந்து சென்று பார்த்து மகிழ்ந்தமையினைக் காணமுடிந்தது.
நவீன கல்வி முறையின் ஆதிக்கத்திற்கும் அப்பால் இச்சிறுவர் கூத்தாற்றுகை நிகழ்வானது சிறுவர்களிடையே போட்டித் தன்மையற்ற வகையில் மகிழ்ச்சியாகவும்,ஒற்றுமையாகவும் நடைபெற்று முடிந்தமையினை அவதானிக்க முடிந்தது. இந்தநிகழ்விற்கு அண்ணாவியார் வே.தம்பிமுத்து அவர்களும் மற்றும் கூத்தாற்றுகையில் பங்குகொண்ட சிறுவர்கள்,அவர்களது பெற்றோர்கள்,அச்சமூகத்தினர் ஆகியோர்கள் தங்களது முழு ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் வழங்கியிருந்தனர்.
சிறுவர்களது பல்வகைத் திறமைகளையும் வளர்க்கும் அரங்காகச் சிறுவர் கூத்தரங்கம் உள்ளது. ஆக்கபூர்வமான,படைப்பாற்றல் மிக்க தலைமுறையினை உருவாக்குவதற்கு இவ்வாறான அரங்கச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியது அவசியமாகவுள்ளது.


