இந்த விபத்து திங்கட்கிழமை (23) அதிகாலை 4.45 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார், இரண்டாவது மையில் கல் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனைமரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்தில் காரை செலுத்தி சென்றவர் மற்றும் காரில் பயணித்த 15 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில், மட்டக்களப்பு சின்ன ஊறணி கருவப்பங்கேணி செலியன் வீதி இரண்டாம் குறுக்கைச் சேர்ந்த சாரதியும், கருவப்பங்கேணி மற்றும் நாவலர் வீதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 15 வயது சிறுமியான மகளுடன் கருவப்பங்கேணியில் உள்ள அவர்களது பன்றிவளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக சம்பவதினமான இன்று அதிகாலை கார் சாரதியுடன் படுகாயமடைந்த பெண் பயணித்த போது கார் வேகக்கட்டுப்பாட்டை மீறி பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
படுகாயமடைந்த சிறுமியின் தாயாரான பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.