
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதியிலுள்ள தும்பாஞ்சோலை பகுதியில் வீதியில் நித்திரரை செய்த ஒருவர் மீது வாகன ஏறியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன் அவருக்கு அருகில் நித்திரை செய்தவர் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் செவ்வாய்க்கிழமை (17) அதிகாலையில் இடம்பெற்றதுடன் இளைஞன் மீது ஏற்றிய வாகனம் தப்பி ஓடியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மண்டூர் சின்னவத்தையைச் சேர்ந்த 25 வயதுடைய செல்வம் சாந்தன் செல்லையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
செங்கலடி பதுளை வீதியிலுள்ள கரடியனாறு தும்பாஞ்சோலை பகுதியிலுள்ள வீதிக்கு அருகிலுள்ள வேளாண்மை காவலுக்காக குறித்த இளைஞன் உட்பட இருவர் நேற்று திங்கட்கிழமை இரவு சென்று இங்கு வீதி ஓரத்தில் நித்திரை செய்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 1.30 மணியளவில் வீதி ஓரத்தில் நித்திரை செய்த இளைஞன் மீது வீதியால் சென்ற வாகனம் ஏறிச் சென்றதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடப்பதை கண்டு அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை இளைஞனுடன் நித்திரை செய்தவர் தெய்வாதீனமாக தப்பியுள்ளதுடன் அவர் கண்விழித்த போது இளைஞனுக்கு என்ன நடந்தது என தெரியாத நிலையில் இருந்துள்ளதுடன் மதுபானம் அருந்திவிட்டு வீதியில் நித்திரை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொண்டபோது தலையில் வாகனத்தின் ரயர் எறியதால் உயிரிழந்துள்ளதாக சட்டவைத்திய அதிகாரிகள் கண்டறிந்துள்ளதையடுத்து இளைஞன் மீது வாகனத்தை ஏற்றி விட்டு தப்பி ஓடிய வாகனத்தை கண்டு பிடிப்பதற்கான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.