மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்பு


(க.விஜயரெத்தினம்)


மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நேற்று முன்தினம் (11) கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளராக இருந்த திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் தேசிய கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்று சென்றுள்ளதையடுத்து மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் வெற்றிடம் நிலவியிருந்ததையடுத்து இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தரத்தைச் சேர்ந்த அதிகாரியான இவர் திருகோணமலை கல்வி வலயப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையிலையே அங்கிருந்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் விடுவிக்கப்பட்டு மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தின் பணிப்பாளராகவும்,இருந்து சிறந்த சேவையினை ஆற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவர் தனது ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு திகிலிவட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும், இடைநிலை,உயர் கல்வியை கிரான் மத்திய கல்லூரியிலும் கற்று வந்ததுடன் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரியாகவும் பட்டக்கல்வியை பூர்த்தி செய்துள்ளதுடன் மதுரை காமராஜ் கல்லூரியில் முதுகலைமானி (பொதுநிருவாகம்) பட்டத்தையும், தாய்லாந்து மகிடொன் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணி (கல்வி முகாமைத்துவம்) பட்டத்தையும் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்ற இந்நிகழ்வில் முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளரும், கல்வி உயர்கல்வி அமைச்சின் கொள்கை திட்டமிடல், செயலாற்று கை மீளாய்வு மேலதிக செயலாளருமான திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.ஆர் ஹஷந்தி மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு வலயங்களின் அதிகாரிகளும்,உத்தியோகஸ்தர்களும் கலந்துகொண்டார்கள்.