சவுக்கடிக் கடலில் காணாமற்போன மீனவரின் சடலம் கரை ஒதுங்கியது

(பேரின்பராஜா சபேஷ்) மட்டக்களப்பு மாவட்டத்தின் சவுக்கடிக் கடலில்  காணாமற் போன மீனவரின் சடலம் இன்று   காலை புன்னைக்குடாக் கடற்கரையில் கரை ஒதுங்கியிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


ஏறாவூர் ஐயங்கேணி பாடசாலை வீதியைச் சேர்ந்த கந்தசாமி கிரிதரன் (வயது 20) என்ற மீனவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கடந்த வியாழக்கிழமை காலை தோணியில் சென்று கரைவலை போட்டுக் கொண்டிருந்த போது பாரிய அலையில் ஒன்பது மீனவர்கள் சென்ற படகு, கவிழ்ந்தது இவர் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போயிருந்தார்.ஏனைய எட்டு மீனவர்களும் நீந்தி கரைசேர்ந்துள்ளனர்.

இவரை தேடும் முயற்சிகள் தொடர்ந்தன. எனினும் சடலம் கண்டு பிடிக்கப்பட்டிருக்கவில்லை. இதேவேளை, இன்று அந்த மீனவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.