(பேரின்பராஜா சபேஷ்) ஐக்கிய தேசியக் கட்சி கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸுடன் சேர்ந்து ஒருபோதும் ஆட்சியமைக்காது. ஐக்கிய
தேசியக் கட்சிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டால் மாத்திரமே இது
சாத்தியமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக்
கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயாகமகே தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில்
வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து
தெரிவிக்கையில் கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு
உறுப்பினர்கள் 11 பேரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து
ஆட்சியமைக்க வேண்டும் என்பதில் உடன்பாடு கண்டிருக்கிறார்கள்.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவமே ஒரு இறுதி
தீர்மானத்தை மேற்கொள்ளாதிருக்கிறது.
கிழக்கு மாகாண சபை ஆளும் தரப்பில் இருக்கும் முஸ்லிம்
காங்கிரஸ் முஸ்லிம் மக்களுக்கு செய்யாத சேவைகளை
எதிர்க்கட்சியிலிருந்து நானே செய்திருக்கிறேன். முஸ்லிம்களின்
உரிமைகளுக்காக போராடியிருக்கிறேன்.
தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் காணிகள்
மஹிந்த ராஜபக்ஷவின் அரசினால் கொள்ளையடிக்கப்பட்ட போது முஸ்லிம்
காங்கிரஸ் மௌனமாக இருந்தது. திருகோணமலை கருமலையூற்று பள்ளிவாசல்
தகர்க்கப்பட்ட போது அதற்கு எதிராக நாமே குரல் கொடுத்தோம்.
அளுத்கம பேருவளை சம்பவங்களின் போது ஐக்கிய தேசிய
கட்சியே மிக தீவிரமாக குரல் கொடுத்தது. எதிர்த்தது. அன்றைய அரசுடன்
ஒட்டியிருந்த முஸ்லிம் காங்கிரஸ் முன்னின்று எதிர்க்க வேண்டிய
பணிகளை நாமே செய்திருக்கிறோம். முஸ்லிம்கள் நூற்றுக்கு நூறு வீதம்
ஐ.தே.கட்சியையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்தார்கள். எனவே
முதலமைச்சர் பதவி எமக்கே வழங்கப்பட வேண்டும் என்றார்.






.jpg)






