பாம்பு தீண்டி பெண்ணொருவர் மரணம்

( நித்தி )மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குப்பட்ட ஈரளக்குளம் கிராமசேவகர் பிரிவில் விசப்பாம்பு தீண்டி குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூப் பொலிசார் தெரிவித்தனர்.

ஈரளக்குளம் பெரியவட்டவான் (சின்னதுரைமாரி) எனும் பிரதேசத்தில் வசிக்கும் கணேசமூர்த்தி மங்களம் (வயது 50) என்ற ஆறு பிள்ளைகளின் பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

இன்று (21)  செவ்வாய்கிழமை இரவு   3 மணியளவில் தனது வீட்டில் வைத்து விசப்பாம்பு தீண்டியுள்ளதை அறிந்ததும், இரவோடு இரவாக சந்தனமடு ஆற்றுப்பாதையுடாக மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு அனுமதித்ததையடுத்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில்  12 மணியளவில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

உறவினரிடம் சடலத்தை கையளிப்பதற்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் ஏறாவூப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குப்பட்ட ஈரளக்கும் கிராமசேவகர் பிரிவுகளில் விசப்பாம்பு தீண்டி உயிரிழப்புக்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களிலிருந்து குறித்த கிராம சேவகர் பிரிவுகளுக்காக பிரதேச வைத்தியசாலை மற்றும் அம்பிலன்ஸ் போன்ற விசேட தேவைகளை பல்வேறு தரப்பினரிடமும் பொதுமக்கள் கோரியிருந்த நிலையில் எல்லாம் எட்டாக்கனியாகவே காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த கிராமத்துக்கு செல்லும் சந்தனமடு ஆற்றுக்கு ஒரு பாலமொன்று ஏற்படுத்திதரும் பட்சத்தில் இவ்வாறான உயிரிழப்புகளை குறைத்துக்கொள்ள முடியுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.