ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை மற்றும் சட்ட விரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 13 தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிவானுமான எச்.எம். முகம்மது பஸீல் உத்தரவிட்டார்.
கடந்த முதலாம் திகதி வியாழக்கிழமை தென்கிழக்குப் பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் வீடுதி வசதி ஏற்படுத்தி தருமாறு கோரி பாரியளவிலான ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களினால் பல்கலைக்கழகத்தினுள் விடுதி வசதி அமைத்து தருமாறு கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.
இதனையடுத்து அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பேரிலேயே மேற்குறித்த குற்றச்சாட்டுக்களின் பேரில் 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர் என அவர் மேலும் கூறினார்.