தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ராக்கிங் குற்றச்சாட்டின் பேரில் ஓரே தடவையில் 331 மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசிக்க காலவரையறையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் 2ம் ஆண்டு ஆண்டு கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மீதும் இந்த தடை அமுலுக்கு வந்துள்ளது.
இந்த தடை காரணமாக அந்தத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்தும் தற்போது வெளியேறியுள்ளனர்.
புதிதாக அனுமதி பெற்றுள்ள 1ம் ஆண்டு மாணவர்கள் குறிப்பிட்டட காலத்தின் பின்னர் ராக்கிங் செய்யப்பட மாட்டார்கள் என பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு வழங்கிய உத்தரவாதத்தை மீறி இம் மாணவர்கள் நடந்து கொண்டதாக பல்கலைக்கழகத்தின் துனை வேந்தரான பேராசிரியர் எம்.எம். எம். நாஜீம் தெரிவித்தார்.
தொடர்ந்தும் ராக்கிங்கில் இம் மாணவர்கள் ஈடுபட்டு வந்தமை தொடர்பாக விரிவுரையாளர்கள், பெற்றோர்கள் உட்பட பல்வேறு தரப்பினராலும் தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் 2ம் ஆண்டு ஆண்டு கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மீதும் இந்த தடை அமுலுக்கு வந்துள்ள போதிலும் வர்த்தகம் முகாமைத்துவ பீடத்தின் 2ம் ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரை தவிர்ந்த அனைத்து விரிவுரைகளும் வழமை போல் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
இந்த தடை நீக்கம் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த சில தினங்களில் ஓழுக்காற்றுக்குழு உட்பட பல்கலைக்கழக நிர்வாகம் கூடி தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.