கல்குடா பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்குடாவில் கட்டிட கூரை வேலை செய்யும் போது ஒரு பிள்ளையின் தந்தையான ஓடாவி ஒருவர் (தட்சுவேலை) தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், எட்டாம் குறுக்கு முறாவோடை (தமிழ்) என்ற இடத்தை சேர்ந்த நடேசன் நவசுமன் (வயது 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
சேவை நோக்கு நிலையம் ஒன்றில் நேற்று (6) சுமார் மாலை நான்கு மணியளவில் கட்டிடத்தின் கூரை அமைப்பதற்காக சக தொழிலாளர்களுடன் மர தளபாட வேலைகளை சுமார் 18 அடி உயரத்தில் நின்று செய்து கொண்டிருக்கும் போது தவறி கொங்றீற் தரையில் விழுந்தே இச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரியவருகிறது.
தற்போது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேதப் பரிசோதனை முடிந்த பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை கல்குடா பொலீஸார் மேற்கொண்டுள்ளனர்.