கிழக்கில் அனைத்து அரசாங்க திணைக்கள, கூட்டுத்தாபன அலுவலகங்களிலும் டெங்கு ஒழிப்பு சிரமதானம்


  ( -ஏ.எச்.ஏ. ஹுஸைன்  )

கிழக்கு மாகாணத்தில் உயிராபத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வரும் டெங்கு நோய்த் தாக்கத்தை இல்லாதொழிப்பதற்காக கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களும் தலா இரண்டு மணித்தியாலங்கள் முழுமையான சிரமதானத்தில் ஈடுபட வேண்டும் என்ற பணிப்புரை மாகாண சபையால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

டெங்கு நோயினை இல்லாதொழித்தல் மற்றும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகிப் பெருவதைக் கட்டுப்படுத்தல் போன்ற செயற்திட்டங்களை ஆராயும் விஷேட கலந்துரையாடல் கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் ஏறாவூர் செய்னுலாப்தீன் ஆலிம் வாவிக்கரைப் பூங்காவில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது.


இதில் முப்படை அதிகாரிகள், உள்ளுராட்சி நிருவாக அதிகாரிகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் சமூக நல நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், வைத்தியசாலைகளைத் தவிர  மற்றெல்லா அரச அலுவலகங்களிலும்  திங்கட்கிழமை காலை 8.30 மணிமுதல் காலை 10.30 மணிவரை இரண்டு மணித்தியாலங்கள் முழுமையான சிரமதானங்கள் செய்யப்பட வேண்டும் என்று மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த உத்தரவு டெங்கு அபாயம் தணியும் வரை கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டும்.
டெங்கு நுளம்புகள் பரவுவதற்குத் தோதாக இடங்களை வைத்திருப்போர் மீது எந்த வித தயவு தாட்சண்யமும் பாராது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் நான் உள்ளுராட்சித் திணைக்களங்களை அறிவுறுத்தியுள்ளேன்.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு அடுத் நிலையில் டெங்கு எச்சரிக்கைப் பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனவரியிலிருந்து டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்த வண்ணமே காணப்படுவதை வைத்தியசாலைத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

மார்ச் மாதத்தில் கடந்த இரு வாரங்களுக்குள் மட்டக்களப்பு நகரம் 119 பேர், களுவாஞ்சிக்குடி 65, ஏறாவூர் 77 என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் மாவட்டத்தில் செங்கலடி, மட்டக்களப்பு நகர், மற்றும் காத்தான்குடி ஆகிய இடங்களில் தலா ஒரு மரணம் என்ற அடிப்படையில் இதுவரை 3 மரணங்கள் சம்பவித்துள்ளன.

மேலும் அதி தீவிர கண்காணிப்பில் இருவர் என்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளார்கள்.

1219 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
ஏறாவூரும் கிட்டத்தட்ட எச்சரிக்கப்பட வேண்டிய பிரதேசமாக உள்ளது.
ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திலுள்ள மிச்நகர் கிராமத்தில் மாத்திரம் இதுவரை 148 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது ஒரு எச்சரிக்கையை உணர்த்தி நிற்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று உட்பட எல்லா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

தென்னிலங்கையில் 25 ஆயிரம் இடர்காப்பு பெண்கள் தொண்டர் அணி உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றது.

அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் குறைந்தபட்சம் மாவட்டத்தில் 500 பேராவது இடர்காப்பு தன்னார்வத் தொண்டர் அணி உருவாக்கப்பட வேண்டும்.