மட்டக்களப்பில் ரயிலில் மோதி இளைஞன் பலி ! கடிதம் மீட்பு

மாகோவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு, இளைஞனொருவன் உயிரிழந்துள்ளான் என, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, திராய்மடு பகுதியில், இன்று (20) பிற்பகல்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது 24 வயது மதிக்க தக்க இளைஞனே உயிரிழந்துள்ளான் எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், மட்டக்களப்பு ரயில் நிலையத்துக்கு ரயில் மூலமே கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருந்ததுடன் இதுதொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டனர்.

உயிரிழந்த இளைஞன், சிங்கள இளைஞனாக இருக்கலாம் என தெரிவித்த பொலிஸார், சிங்களத்தில் கடிதம் ஒன்றை எழுதிவிட்டே, அவர், ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார் எனவும் கூறினர்.

குறித்த இளைஞனின் பை ஒன்றுமட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்பான வேறு எந்த அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமும் அவரிடம் காணப்படவில்லையெனவும் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.