தலைக்கவசத்தைத் திருடிய இருவர் ரூ. 2 இலட்சம் சரீரப் பிணையில் விடுதலை

திருகோணமலை, டைக் வீதியிலுள்ள ஹோட்டலொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த 1,800 ரூபாய் பெறுமதியான தலைக்கவசத்தைத் திருடிச்சென்ற இரு சந்தேகநபர்களை, தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்லுமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த சுப்பரமணியம் சுகந்தன் (வயது 32) என்பவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய, தலைக்கவசம் காணாமல் போனமை தொடர்பான விசாரணைகள், துறைமுக பொலிஸ் உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எஸ்.நஜீம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டன.

ஹோட்டலில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெரா காட்சி பதிவுகளும் பெறப்பட்டு, சந்தேகநபர்களைத் தேடி வந்த நிலையில், கும்புறுபிட்டி, தில்லைநகர் பகுதிகளைச் சேர்ந்த இருவர், மோட்டார் சைக்கிளில் வந்து, தலைக்கவசத்தைத் திருடியமை, பொலிஸ் ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது.


இதனையடுத்து, தலைக்கவசம் திருடிய குற்றச்சாட்டில் குறித்த இருவரையும் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் சரீரப்பிணையில் செல்லுமாறும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும், நீதவான் உத்தரவிட்டார்.