50 ஆயிரம் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பம்!

வடக்கு மற்றும் கிழக்கில் அரசினால் 50 ஆயிரம் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்திற்கு எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி கேள்வி மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளதாக தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

குறித்த வீடமைப்பு திட்டம் தொடர்பிலான மதிப்பீடுகளை மேற்கொண்டு, திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் தேர்வு செய்யப்படும் எனவும்,  இந்த வீடமைப்பு திட்டத்திற்காக சீனா மற்றும் இந்தியாவினைச் சார்ந்த நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் செலவில் வடக்கு மற்றும் கிழக்கில் நிர்மாணிக்கப்படும் குறித்த வீடமைப்பு திட்டத்தில் நிர்மாணிக்கப்படும் வீடுகள் பயனாளர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


அதேபோன்று, வடக்கு கிழக்கில் புதிய பாதைகள் நிர்மாணிப்பு, மற்றும் பாதைகள் புனரமைப்பு தொடர்பிலாக கேள்விப்பத்திரங்களைத் தயாரிக்கும் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார்.