​’சைட்டம்’ மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் ​இணைக்க உத்தரவு

மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இணைக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (21) பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர், இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், தற்போது கல்வி கற்றுவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் அடிப்படைத் தகைமைகள் பரீட்சிக்கப்பட்டதன் பின்னர், அவர்களை, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வதற்கும், இந்தக் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.