கிழக்கிலங்கையின் முதல் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் முதல் கட்ட பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றது


கிழக்கிலங்கையின் இளைஞர்களின் கனவின் முதல் கட்டம் தொடங்கி விட்டது. கோட்டைமுனை விளையாட்டு கழகத்தால் மட்டக்களப்பில் புதிதாக அமைக்கப்படும்  புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் முதல் கட்ட பணிகள் 25.02.2018ல் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை  சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இம்மைதானத்தை அமைப்பதற்காக இதுவரை 13 புற்தரை மைதானங்களை  அமைத்த நுகேகொட டிமெல் நிறுவனம் சிறப்பாக தம்பணியை செய்து வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை கிரிக்கெட்  விளையாட்டில்  பாரிய முன்னேற்றங்கள் இன்று வரை காணப்படுவதாக தெரியவில்லை இதற்கு பல காரணங்களை பலர் கூறினாலும் இதற்கு மிகப்பிரதான காரணமாக  மைதானமே காணப்படுகின்றது. கடின பந்து போட்டிகளை நடாத்துவதற்கு உரிய ஒரு  மைதானமாக மட்டக்களப்பில்  காணப்பட்ட வெபர் மைதானமும் தற்போது மெய்வல்லுனர் போட்டிகளுக்கான மைதானமாக மாற்றப்பட்டதால் அவ்மைதானம் எமது கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து கைநழுவி போக மட்டக்களப்பு சிவானந்தா மைதானமே தஞ்சமென வாழ்ந்து வரும் எமது வீரர்கள் எப்படி தேசிய மட்டத்தில் சாதிக்க முடியும் இருந்தும் எமது ஒரு சில வீரர்கள் அதிலும் சாதித்து சாதனை படைத்துள்ளது அவர்களின் தனித்திறமையே சாரும் எனலாம்.

இதற்காக மட்டக்களப்பில் உள்ள கிரிக்கெட் நலன் விரும்பிகளும் அக்கரை கொண்டோரும் ஒரு தீர்க்கமான முடிவை எட்டாததால் கோட்டைமுனை விளையாட்டு கழகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்குடன் புலம் பெயர்ந்து வாழும் கழக அங்கத்தவர்களுடன் கலந்துரையாடியதன் பயனாக இன்று இம்மைதானத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டு செயல் வடிவில் உருப்பெற்று வருகின்றது. யாரும் நினைக்க முடியாத அளவில் செய்யப்படும் இம்மைதானத்திற்கான பணிகளை பார்வையிட பல பிரபலங்களும் வந்து செல்கின்றனர்.
 
இம்மைதான பணிகள் இவ்வருட இறுதியில் முடிவடையவுள்ளதாக கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் சடாற்சரராஜா கருத்து தெரிவித்துள்ளார் இதன் மூலம் கிழக்கிலங்கையில் இருந்து சிறந்த வீரர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் எனவும் திடமாக கூறியுள்ளார்.