கல்லடி பேச்சியம்மன் சடங்கின் பள்ளயத்திருவிழா நாளை



(க.விஜயரெத்தினம்)
கல்லடி பேச்சியம்மன் சடங்கின்ன் பள்ளயத்திருவிழா  திங்கட்கிழமை நடைபெற இருக்கின்றது 

கிழக்கு மாகாணம் சிறுதெய்வ வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று தமிழர்களின் கலை,கலாச்சாரம், பண்பாடுகள் தலைத்தோங்கும் புனிதபூமியாக திகழ்கின்றது.அந்தவகையில் மறத்தமிழன் வாழ்கின்ற மட்டக்களப்பு மண்ணின் வரலாற்று விடயங்கள் காலத்தால் அழியாத சான்றுகளாக திகழ்கின்றது.
"வந்தாரை வரவேற்று வாழ்வாங்கு வாழவைத்து;மீன்பாட தேன்பாயும்..." மட்டுமாநகரில் கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்த இனம்தான் தமிழினம் ஆகும்.
தமிழர்களின் ஆதிகால கலை,கலாச்சார,பண்பாட்டு பாரம்பரியங்களை அழிந்துவிடாமல் எதிர்கால சந்ததிக்கு சிறப்பாக பேணிப்பாதுகாக்கும்  சக்தி வழிபாட்டுத்தலமாக கல்லடி உப்போடை பேச்சியம்மன் விளங்குகின்றது.இவ்வாலயம் மட்டக்களப்பு மண்ணில் சிறப்பான ஆலயமாகவும் திகழ்கின்றது.
ஆதிகாலம் முதற்கொண்டே இயற்கையையும்,மரங்களையும் தெய்வ உருக்கொண்டு வழிபட்டு வந்ததே ஆதித்தமிழர்களின் வரலாறு கூறுகின்றது.காலப்போக்கில் வேறுபல உள்ளீடுகள் ஏற்பட்டு தமிழர்களின் இந்த வழிபாட்டு முறைகள் மாறிவருகின்ற போதிலும் இலங்கையின் கிழக்குத்தமிழர்களின் ஆதிகால வழிபாட்டுமுறைகள் தொடர்ந்தும் அங்கு வாழும் தமிழர்களினால் பின்பற்றப்படுகின்றது.கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு மண்ணிலே ஆதிக்குடிகளின் இயற்கை,சிறுதெய்வ வழிபாட்டு முறைகள், பாரம்பரியங்கள் அழிந்துவிடாமல் தற்போதும் முறையாக பேணப்பட்டு வருகின்றது விஷேட அம்சமாகும்.எல்லாவற்றிலும் மாற்றத்தை விரும்பும் சமூகத்தின் சிந்தனையை வலியுறுத்துகின்ற தரப்பை ஆச்சரியப்படுத்தி வருகின்றது.சக்தி வழிப்பாட்டு முறைகள் கிழக்கிழங்கையில் அத்தனை கிராமங்களிலும் இற்றைவரைக்கும் தெய்வீக சிந்தனையுடன் பராமரிக்கப்பட்டு வழிபாடுகளுடன் எழுச்சியுடன் நடைபெறுகின்றது.
பேச்சியம்மன் ஆலயங்கள் திருகோணமலை,சின்ன ஊறணி,வடமுனை,முறக்கொட்டாஞ்சேனை,வாழைச்சேனை,பேத்தாழை,கல்லடி உப்போடை,நொச்சிமுனை,ஆரையம்பதி, பெரியநீலாவணை போன்ற இடங்களில் காணப்படுகின்றது.இப்பிரபஞ்சத்தை ஆளுகின்ற ஆதிபராசக்தி தேவைக்கேற்ப அவ்வப்போது பல்வேறு அவதாரங்களை எடுத்து கண்ணகியம்மன்,மாரியம்மன்,பேச்சியம்மன்,காளியம்மன் என்று அவதார நோக்கங்களை நிறைவேற்றியுள்ளதாக மக்கள் நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள்.அந்தவகையில் பேச்சியம்மாவின் அவதாரத்தின் ஒன்றாக அமையப்பெற்றதே கல்லடி உப்போடை பேச்சியம்மன் ஆலயமாகும்.
பேச்சியம்மன் வரலாறு
கல்லடி உப்போடை பேச்சியம்மன் 320 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட முதன்மையான ஆலயமாக திகழ்கின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.ஓலைக்குடிசையில் வாழும் தெய்வசக்தி மிக்க பேசும்தெய்வமாக எல்லோராலும் பேசப்படுகின்றது.பேச்சித்தாயாருக்கு கல்லடி உப்போடை மண்ணில் கட்டிடங்களோ அல்லது கோபுரங்களோ கட்டக்கூடாது என்பது ஒரு ஐதீக உண்மையாகும்.நவீன தொழிநுட்பம் வளர்ச்சியடைந்த காலத்தில் பணச்செல்வாக்குடன் பல்வேறு வடிவங்களில் ஓவியக்கலை,சிற்பக்கலையுடன் கருங்கற்களைக் கொண்டு ஆலயம் அமைக்கலாம் அல்லவா.ஆனால் இப்பேச்சித்தாயார் ஆடம்பரத்தை விரும்பாமல் மிகவும் எளிமையாகவும்,தெய்வசக்தியுடன் மக்களுடன் மக்களாக இருந்து மண்ணில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றாள்.இதனை மீறிக்கட்டுவதற்கு முயன்றால் முயன்றோருக்கு தாயவள் எச்சரித்ததாகவும்,மீறிக்கட்டியோருக்கு அம்மாள் தண்டனை வழங்கியதாகவும் வரலாறுகள் கூறப்படுகின்றது.
பயங்கர சக்தியுடைய கல்லடி பேச்சியம்மன் வருடாந்த திருச்சடங்கு கல்லடி உப்போடை மண்ணில் சிறப்பாக நடைபெறுகின்றது.கல்லடி மண்ணில் இருந்து தூரதேசங்களிலும்,வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்து இக்கிராமத்தின் மக்கள் வாழ்ந்தாலும் பேச்சித்தாயாரின் சடங்கிற்கு பேச்சித்தாயாரால் கட்டாயமாக ஈர்க்கப்பட்டு சடங்குகளில் பங்குபற்றுவதற்குரிய தெய்வசக்தியை தாயவள் வழங்கின்றாள் என்று அடியார்கள் கூறுகின்றார்கள்.சிலவேளை மறந்து வாழ்ந்தாலும் பேச்சித்தாயாரின் அடியார்களுக்கு பேச்சித்தாயார்  கனவில் தோன்றி அழைக்கும் சக்தியுள்ளதாக அடியார்கள் மகிழ்ச்சியுடன் சொல்லுகின்றார்கள்.
சக்தியும்,அருளும், நிறைய அற்புதங்கள் நிறைந்து சொன்னபடி அருளை கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுத்து எம்மக்களை காத்தருளும் அன்னைக்கு சடங்குகள் விஷேடமாக இடம்பெறும்.அன்னையின் திருச்சடங்கிற்கு அடியார்கள் பயபக்தியுடன் புத்தாடை அணிந்து, பூசைவழிபாடுகளில் கலந்துகொண்டு இன்புற்று வாழும்நிலை இன்றும் காணப்படுகின்றது.
பேச்சியம்மன் சடங்குகள்
கல்லடி பேச்சியம்மன் சடங்கானது ஆடி அமாவாசைக்கு முன்னாள் வரும் ஞாயிற்றுக்கிழமை அல்லது பின்னால் வரும் ஞாயிற்றுக்கிழமை கதவுதிறத்தல் சடங்கு வருடாந்தம் இடம்பெறுகின்றது.இவ்வருடத்திற்கான கதவுதிறத்தல் சடங்கானது கடந்த ஞாயிற்றுக்கிழமை(12.8.2018)விளம்பி வருடம் ஆடித்திங்கள் 27ம் நாள் திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பிக்கப்பட்டு நாளை திங்கட்கிழமை(20.8.2018) இடம்பெறும் பள்ளயம்,திருச்சடங்கு ஆகிய பொதுச்சடங்குகளுடன் இனிது நிறைவுபெறவுள்ளது.
பேச்சியம்மன் ஆலயத்தில் தினமும் பகல்,இரவுப்பூசைகள் கிராமத்தில் உள்ள பொதுமக்கள்,ஆலய நிருவாகத்தாலும் பூசைகள் இடம்பெறுகின்றது.பேச்சித்தாயார் கிராமத்தில் அடியார்களை தரிசித்து ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்வானது ஊர்வலமாக செல்லுதல் சிறப்பானதாகும்.பட்டெடுத்தல் சடங்கு,கலிச்சடங்கு,அக்காளிடம் செல்லுதல்,மடிப்பிச்சை எடுத்தல்,நெல்குற்றுதல்,பள்ளயச்சடங்கு,திருக்கும்பம் சொரிதல் போன்ற நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் திருச்சடங்கு காலத்தில் இடம்பெறும்.
மனிதர்களாக மண்ணிலே பிறந்த ஒவ்வொரு மனிதனும் நோயில்லாமல்,துன்பமில்லாமல்,குறையில்லாமல் வாழ்ந்த வரலாறுகள் இல்லை.இவ்வாறான கஸ்டங்கள் எம்மக்களுக்கு வரும்போது இவற்றை பேச்சித்தாயாரின் அடியார்கள் மனதில் தாயவளை நிலைநிறுத்தி நேர்த்தி வைப்பார்கள் அல்லது குறைகளையும்,கஸ்டங்களையும்,நோயையும் தீர்த்து வைக்குமாறு அம்பாளிடம் வேண்டுதல் வைப்பார்கள்.இதனை பேச்சித்தாயார் தங்குதடையின்றி அடியார்களை நாடியும், சக்தியுடன் அற்புதங்களாக தீர்த்து வைத்திருக்கின்றாள் பேச்சித்தாயார்.இச்சடங்கு காலத்தில் அடியார்கள் தாயவளுக்கு காவடியெடுத்தல்,தீச்சட்டி எடுத்தல்,மடிப்பிச்சை எடுத்தல்,அங்கப்பிரதட்சிணம் எடுத்தல்,நேர்த்திப்பொருட்கள் வழங்கல் என்பவற்றை அடியார்காள் பேச்சித்தாயாருக்கு நிறைவேற்றி இன்புற்று மகிழ்வார்கள்.
பேச்சித்தாயாரின் அற்புதங்கள்
கல்லடி பிரதேசத்தை சேர்ந்த அடியார் ஒருவருக்கு இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் முகத்தில் அம்மைநோய் ஏற்பட்டு அவதிப்பட்டு காணப்பாட்டார்.பல்வேறு துன்பங்களுடன் கஸ்டப்பட்ட அடியாரின் கனவில் பேச்சித்தாயார் தோன்றி எனது ஆலயத்திற்கு சென்று என்னை தரிசித்தும்,தேத்தாமரத்தடியில் பொருள் ஒன்றும் வைத்திருக்கின்றேன் என பேச்சித்தாயார் சொல்லிட்டு ஒளிப்பிளம்புடன் மறைந்திட்டாவு.அதனை அவ்வடியார் காலையிலேயே கோயிலுக்குச் சென்று வழிப்பட்டார்.தாயவளின் சந்நிதியில் உள்ள தேத்தாமரத்தடிக்குச் சென்றார்.திடீரென தாயவள் தோன்றி மரத்தடியில் வெற்றிலை அடியாருக்கு காட்சியளிக்கப்பட்டது.வெற்றிலையை அடியார் மகிழ்ச்சியுடன் எடுத்து மென்றுள்ளார்.இதனால் அம்மைநோய் நீங்கி அடியார் எந்தவித கஸ்டமின்றி, துன்பமின்றி வாழ்ந்ததாக அடியார்கள் கூறுகின்றனர்.
அபிஷேகம், அற்புதம்,அதிசயங்கள் நிறைந்த தாயார் மக்களுடன் பேசுகின்ற தெய்வமாய் ஆட்சிபுரிந்து பிரதேசத்தில் வருகின்றாள்.பிள்ளைப்பேறு இல்லாதவர்களும் பேச்சித்தாயாரை பணிந்து பிள்ளைவரம் பெற்றுத்தாம்மா என்று நேர்த்தி செய்வார்கள்.விரதம் இருந்து புத்தாடையுடன் வீடுவீடாக சென்று தம்பதிகள் மடிப்பிச்சை எடுத்து ஆலயத்தில் சமர்ப்பிப்பார்கள்.பின்னர் இடம்பெறும் நெல்குத்துதல் சடங்கில் பிள்ளைவரம் இல்லாத பெண்கள் உலக்கை பிடித்து நெல்குத்தி பொங்கல் பூசையை செய்வார்கள்.தாயின் அருட்கடாச்சத்தினால் பிள்ளையில்லாத பெண்கள் மூன்று மாதத்திற்குள் மகிழ்ச்சியுடன் பிள்ளையை சுமந்து தாய்மை அடைந்திருப்பார்கள்.சுமார் கணக்கிடமுடியாத அடியார்கள் பிள்ளையை பெற்றெடுத்து நேர்த்தியை நிறைவேற்றியமை பேச்சுத்தாயாரின் அதிசயமாகும்.
கோடிக்கணக்கில் பணம் சேகரித்து இன்பமாக நாம் வாழ்ந்தாலும் கோயிலுக்கு சென்று கோபுர தரிசனம் செய்வதுதான் இன்றைய கலியுகத்தில் சிறப்பாகவுள்ளது.இன்று இந்துக்கள் எமது வாழ்வை வளப்படுத்துவதற்காக ஆலயத்தை நாடிச்செல்கின்றார்கள்.சரியை,கிரியைத்தொண்டு கடந்த காலங்களில் செய்தாலும் யோகத்தை செய்து ஞானத்துடன் முத்தியடைவதுதான் மனிதப்பிறப்பின் இன்றைய  நோக்கமாகும்.இன்றைய தமிழ் சமூகம் ஆன்மீகத்தில் இருந்து விலகிச் செல்லாமல் தத்தமது கடவுளை வழிபட்டு எல்லாச் செல்வங்களுடன் வாழ்வதுதான் மனிதப்பிறவியின் எண்ணமாகும்.பார்ப்பவர்களை உறையவைக்கும் பேச்சியம்மன் வருடாந்த சடங்கினை தலைமைப் பூசகர் நா.வை.பொன்னையா சிறப்பாக நடாத்துவார்.

ஓலைக் குடிசையினுள் ஒய்யாரமாய் வீற்றிருந்து நாடி வருவோருக்கு நல்லாசிகள் வாரிவழங்கும் பேச்சித்தாயாரின் ஆலயம் இலங்கையில் புகழ்பூத்த ஆலயமாக இருந்தாலும் இந்துசமய பாடப்புத்தகத்தில் பேச்சித்தாயாரின் அற்புதங்கள்,மகிமைகளை இதுவரையும் சேர்க்கப்படவில்லை என்பது திண்ணமாகும்.