தமிழர்களின் பண்பாடுகள் மற்றும் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தினை மாணவர்கள் மத்தியில் பேணிவரும் மட்டக்களப்பு ஆரையம்பதி உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தில் வருடாந்தம் நடைபெறும் நவராத்திரி விழா நிகழ்வுகள் இவ்வருடமும் நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் விஜயதசமி உட்பட தொடர்ச்சியாக பத்து நாட்களும் பூஜை நிகழ்வுகள் கல்லூரி வளாகத்தில் அமையப்பெற்றுள்ள ஆலயத்தில் வெகு விமரிசையான முறையில் நடைபெற்று வருகிறது.
இவ் நவராத்திரி விழாவினை கல்லூரியில் கல்வி பயிலும் கணக்கியல் டிப்ளோமா, உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா, உயர்தேசிய தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் நலனோம்பு முகாமைத்துவம் பாடநெறி மாணவர்கள் தினமும் ஏற்பாடு செய்திருந்தனர். இதனை சிறப்பிக்கும் முகமாக நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளான 17.10.2018 திகதி புதன்கிழமை இன்றைய தினம் சிறப்பு சமய சொற்பொழிவுகளும் மாணவர்களின் கலை நிகழ்வும் கல்லூரியின் கல்வியியல் இணைப்பாளர் திரு.எஸ்.ஜெயபாலன் தலைமையில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு தாழங்குடா கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி திரு எஸ்.பாக்கியராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு கே.குணநாயகம் அவர்களும் மற்றும் கல்லூரியின் விரிவுரையாளர்கள் மாணவ மாணவிகள் ஊழியர்கள் மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகளினால் சிறப்பு சொற்பொழிவுகள் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் கல்லூரியின் அனைத்து மாணவர்களும் கலாச்சார உடையுடன் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.