நவீன தொழிநுட்ப அறிவுடன் ஒழுக்கப் பண்பாடான சிறுவர் தலைமுறை நாட்டில் உருவாக வேண்டும் – ஜனாதிபதி



நவீன தொழிநுட்பத்தின் பெறுபேறுகள் இன்று கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி நாட்டின் அனைத்து சிறுவர்களுக்கும் உரித்தாகவுள்ளது ;

அவர்கள் அந்த அனைத்து தொழிநுட்ப கருவிகளையும் நாட்டினதும் தமது எதிர்கால நன்மைக்காகவும் பயன்படுத்துவார்கள் என தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று கிராமிய பாடசாலைகளிலுள்ள பிள்ளைகளுக்கும் நவீன தொழிநுட்ப கருவிகள் பற்றிய விரிவான அறிவு உள்ளது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி , தான் அப்பாடசாலைகளுக்கு செல்கின்ற போது அப்பிள்ளைகள் கதிரை, மேசைகளை போன்று கணனிகளையும் பெற்றுத்தருமாறு கோருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

அந்த அனைத்தையும் எவ்வித பேதமுமின்றி பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தான் நடவடிக்கை எடுத்து வருவது, நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதினால் ஆகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி , நவீன தொழிநுட்பத்துடன், ஒழுக்கப் பண்பாடான சிறுவர் தலைமுறை ஒன்று நாட்டில் உருவாக வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று (11) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி  இதனை தெரிவித்தார்.

கல்லூரியின் பழைய மாணவரான டி.வீ.சாந்த சில்வாவின் தனிப்பட்ட நிதி அன்பளிப்பில் இந்த விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நேற்று முற்பகல் தேர்ஸ்டன் கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

முதலில் கல்லூரி வளாகத்திலுள்ள படையினரின் நினைவுத்தூபிக்குச் சென்ற ஜனாதிபதியை சிறப்பாக வரவேற்றனர்..

அதனைத் தொடர்ந்து நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் விளையாட்டரங்கை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி , அதனை பார்வையிட்டார்.

கல்லூரியின் அதிபர் கே.வீ.ஏ.எல்.டயஸ் அவர்களினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது.

கல்லூரியின் பழைய மாணவரான எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் கயந்த கருணாதிலக ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.