மீன்பிடித்தலுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருளுடன் ஒருவர் கைது


கிழக்கு கடற்படையினரும் புல்மோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது சட்ட விரோதமாக மீன்பிடிக்க பயன்படுத்தும் வெடிப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்மோட்டை மற்றும் யான் ஓயாப் பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மேற்படி கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, எரக்கன்டிப் பகுதியிலிருந்து புல்மோட்டையை நோக்கி சென்ற கெப் ரக வாகனமொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது மீன்பிடிக்கப் பயன்படுத்தும் 27.55 கிலோ கிராம் ஜெலட்னைட்களும் ( 190 குழாய்கள் ), 35 அடி நீளமான வெடி நூல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது எரக்கன்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், புல்மோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அவரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.