வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் மற்றும் பொலிஸ் குழுக்கள்



வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படவிருப்பதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்தார்.


பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போது பேச்சாளர் இதுதொடர்பாக தெரிவிக்கையில் வன்முறைகள் தொடரப்பில் தகவல்கள் கிடைப்பின்  அந்தப் பிரதேசங்களுக்கு உடனடியாக ஹெலிகொப்டர்களை அனுப்பி வன்முறையாளர்கள் தொடர்பான காட்சிகளை வானிலிருந்தவாரே பதியவும் ஹெலி மூலம் துருப்புக்களை இறக்கி நிலைமையை கட்டுப்படுத்தவும் விமானப் படைத் தளபதி தீர்மானித்துள்ளதாக கூறினார்;
.
இதேவேளை மினுவாங்கொட பிரதேசம் மற்றும் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்டவர்கள் உட்பட பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய சந்தேகத்தின் பேரில் 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான றுவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட குளியாப்பிட்டிய ஹெட்டிபொல ஆகிய நீதிமன்றங்களில் ஆஜார்படுத்தப்பட்ட 37 பேர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


 சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட பொலிஸ் குழுக்கள் சில அமைக்கப்பட்டுள்ளன.பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவர்இ பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் அந்தக் குழுவில் அடங்குகின்றனர். பொலிஸ் அத்தியட்சகர்களின் தலைமையிலான விசேட குழு அந்தச் சம்பவங்களை விசாரணை செய்வதாகவும் பொலிஸ் அத்தியட்சகருமான றுவான் குணசேகர மேலும் தெரிவித்தார்;.