சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் மக்கள் ஐக்கியமுடன் செயற்பட வேண்டும்



நாட்டின் சமாதனத்தையும், எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காக நாட்டு மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். மக்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களின் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், அந்த சதிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்க அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

30 வருடகால யுத்தத்தின் போது பல கொடுமைகளை சந்தித்த நாம் தற்போது அதனை தாண்டி வந்திருக்கும் இத் தருணத்தில் , அனைவரும் நாட்டின் சமாதானத்தை கட்டியெழுப்ப பாடுபட வேண்டும் என்று மதத்தலைவர்களும் மற்றும் புத்திஜீவிகளும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு ஒத்துழைக்கும் வகையில் நாட்டு மக்களும் செயற்பட வேண்டும்.

இவ்வாறான நிலைமையின் போது இதனை தவற விடுவதென்பது நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கும். நாட்டிற்குள் மோதல்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கும், கடந்த மாதம் மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்ட தற்கொலை தாரிகளுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை.

இவ்வாறு நாட்டுக்குள் மோதல்கள் ஏற்படும் வகையில் செயற்படும் நபர்களின் பின்னால் இருப்பவர்கள் குறுகிய நோக்கங்களைக் கொண்ட உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சதிதிட்டகார்களே. இது பொன்ற சதிகாரர்கள் குறித்து இவர்கள் கூட முழுமையாக அறிந்திருக்க மாட்டார்கள்.

இவ்வாறான சதிக்காரர்களுக்கு பகடைக் காய்களாக செயற்படுபவர்களை நாம் ஒன்றிணைந்து அடியோடு ஒழிக்க வேண்டும். இவர்களை நீதிக்கு முன்கொண்டு வந்து முழுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.