ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கட்டடத்தில் தீ; 48 வாகனங்கள் சேதம்



ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு தங்குமிட பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு முச்சக்கர வண்டி மற்றும் 47 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.

கொழும்பு கோட்டை முதலிகே மாவத்தையில் உள்ள குறித்த கட்டடத்தின் அடித்தளத்திலேயே இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்று  இரவு 10.00 மணியளவில் இடம்பெற்ற இத்தீ விபத்து, தொடர்பில் புறக்கோட்டை பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, பொலிஸாரும் கொழும்பு மாநகரசபை தீயணைப்பு பிரிவினரும் இணைந்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த அடித்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் 47 ஆகியன தீக்கிரையாகியதாகவும், இத்தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.