கொரோனா தடுப்பூசிக்கான ஆய்வில் இலங்கை பெண் !

கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் பிரதம ஆய்வாளராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மஹேஷி என். ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் பிறந்த அவர், பிரித்தானியாவில் வைத்திய கல்வியை படித்து முடித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் கொவிட் - 19 தடுப்பூசிக்கான ஆய்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே, இவர் அந்த குழுவில் இடம்பிடித்துள்ளார். அவர் மேகன் மருத்துவக் கல்லூரியில் முதன்மை விரிவுரையாளராக பணியாற்றுகிறார். மேலும், ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுமத்தின் பிரதம ஆய்வாளராகவும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விருது பெற்ற மூத்த மருத்துவ விரிவுரையாளராகவும் உள்ளார்.

மருத்துவ சஞ்சிகையான "The Lancet" சஞ்சிகையின் உலகில் ஒக்ஸ்போர்ட் கொவிட் தடுப்பூசி என்று அழைக்கப்படும் " ChAdOx1 nCoV-19 " தடுப்பூசி குறித்த ஆய்வுக் கட்டுரையில், மஹேஷி என் ராமசாமியின் பெயர் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹேஷி என் ராமசாமியின் தாய் பேராசிரியர் சமரநாயக்க ராமசாமி, கொழும்பு விசாக்கா கல்லூரியின் பழைய மாணவி என்பதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். அவரது தந்தையான ரஞ்ஜன் ராமசாமியும், பிரசித்தி பெற்ற விஞ்ஞானியாவார். அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் அவர் பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.