கத்திக்குத்தில் நிறைவடைந்த குடும்பச் சண்டை !

வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் 4 பகுதியில் குடும்ப சண்டை காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகி மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் 4 பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றின் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது மனைவியுடன் தகராறு தொடர்பில் கதைப்பதற்கு கணவன் பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இரு தரப்பும் கதைத்துக் கொண்டிருந்த போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த குடும்பஸ்தர் தனது மனைவி, மாமி, மாமியாரின் தாயார் ஆகியோரை கத்தியினால் குத்திய நிலையில் அவர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த பெண்ணின் கணவரான 32 வயது குடும்பஸ்தர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிசார் விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் .