ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனத்தின் விசேட கூட்டம்!



ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனத்தின் விசேட கூட்டம் நேற்று  மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஸ அவர்களது வழிகாட்டலில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனத்தின் விசேட கூட்டம் இடம்பெற்றது.


ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கத்தின் தலைவி திருமதி. வசந்தா கந்தபான் கொட பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர்
அணில் வீரசிங்க, பிரதிச் செயலாளர் பாலித குணதிலக (கல்வி அமைச்சு) ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


அதிதிகளை மலர் மாலை அணிவித்து வரவேற்றதனைத் தொடர்ந்து
பொதுஜன பெரமுன கல்விச் சேவைச் சங்கத்தின் கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அதிதிகளின் விசேட உரைகள் இடம் பெற்றது.


இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு, கல்குடா மற்றும் பட்டிருப்பு தொகுதிகளைச் சேர்ந்த அதிகளவிலான அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன், இடமாற்றங்கள், பதவியுயர்வுகள், சம்பள முரண்பாடுகள் மற்றும் கல்வியியலாளர்களின் ஏனைய தேவைகள் தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் கோரிக்கைகளை கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பா.சந்திகுமாரிடம் ஒப்படைத்திருந்தனர்.


இவர்களால் ஒப்படைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் மற்றும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மிக விரைவாக அவற்றிற்கான தீர்வுகள் பொதுஜன பெரமுன கல்விச் சேவைச் சங்கத்தின் ஊடாக வழங்கப்படுமென கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் இதன்போது தெரிவித்தார்.