உல்லாசம் அனுபவிக்க 22 இலட்சத்திற்கும் அதிகபணம் திருட்டு : மூவர் கைது ! ஒருவருக்கு வலைவீச்சு


(ரவ்பீக் பாயிஸ்)

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாட்டிகளி வரோதயநகர் பிரதேசத்தில் உல்லாசம் அனுபவிப்பதற்காக 22 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மற்றும் 19 இலட்சத்துக்கும் அதிகமான காசோலைகளை திருடி உல்லாசம் அனுபவித்த மூன்று பேரை கைதுசெய்துள்ளதாகவும் ஒருவரை வலைவீசி தேடி வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி திருகோணமலை உவர்மலை பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் நபரொருவர் வங்கியில் பணம் மற்றும் காசோலைகளை வைப்பு செய்வதற்காக தனது ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் ஒன்றில் எடுத்துச்சென்று தனது தம்பியின் வீட்டுக்கு முன்னால் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று வெளிவரும் ஓரிரு நிமிடங்களில் மோட்டார் சைக்கிள் டிக்கியை உடைத்து குறித்த பணம் மற்றும் காசோலைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்த குறித்த நபர் தலைமையக பொலிஸாரின் உடனடி நடவடிக்கையினால் சிசிடிவி காணொளி மூலம் சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டதுடன் குறித்த நபர் தொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் திருகோணமலை தலைமையகம் பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எப்.நஜீம் அவர்களின் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த நபர்களின் தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் தரவுகள் பெறப்பட்டு கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் நேற்றைய தினம் இரவு குறித்த மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ய முற்பட்ட போது ஒருவர் தப்பிச் சென்ற நிலையில் இருவரை கைது செய்யப்பட்டதுடன்

குறித்த இரண்டு சந்தேக நபர்கள் வழங்கிய வாக்கு மூலத்தை அடுத்து இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பணத்தின் ஒரு பகுதி நிலாவெளி பிரதேசத்தில் மறைத்து வைத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எப் நஜீம் அவர்களின் தலைமையில் குழு அவ்விடத்திற்கு விரைந்து 18 இலட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பணமும் 19 இலட்சத்துக்கும் அதிகமான மதிப்புடைய 43 காசோலைகளை கைப்பற்றியதுடன் 65 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் உல்லாசத்திற்காக பணத்தினை இவ்வாறு கொள்ளையடித்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை சிவன் கோயில் மற்றும் ஆனந்தபுரி பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடையவர்கள் எனவும் தப்பிச்சென்ற சந்தேகநபரை தேடும் பணியில் திருகோணமலை தலைமையக பொலிஸார் ஈடுபட்டு வருவதுடன்

குறித்த சந்தேக நபர் இருவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (01) மூன்று சந்தேக நபர்களை ஆஜர்படுத்திய போது அதில் இருவரை விளக்கமறியலில் வைக்குமாறும் மற்றுமொரு பெண்ணொருவரை மூன்று இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறும் கட்டளையிட்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.