பல்பொருள் அங்காடிகளுக்கு பியர் உரிமமும் மற்றும் மதுபான நிலையங்களை இரவு 10 மணிவரையும் திறந்து வைக்க வேண்டும் : இராஜாங்க அமைச்சர் டயனா கமகே



மதுபான நிலையங்களை இரவு 10 மணிவரை திறந்து வைக்க வேண்டும் என்றும், பல்பொருள் அங்காடிகளுக்கு பியர் விற்பனை உரிமம் வழங்க வேண்டும் என்றும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரச வருவாய் அதிகரிப்பு தொடர்பான நேற்றைய ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு மனோபாவத்தில் மாற்றம் அவசியம். கஞ்சா என்பது வெறுமனே வீதியில் பாவித்து சுற்றித்திரியும் போதைப்பொருளல்ல. நான் அந்நியச் செலாவணியைப் பற்றி பேசுகிறேன். சில வித்தியாசமான விஷயங்களைப் பற்றி அதன் மறுபக்கத்தைப் பற்றி பேசுகிறேன். கஞ்சா செடியை வளர்க்க சட்டம் தேவையில்லை, கஞ்சா 6000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாசார பின்னணியை கொண்டது. அது 2500 வருட வரலாற்றை கொண்டது இல்லை. அது இராவணன் காலத்திலிருந்தே இருந்தது

இரவு ஒன்பது மணிக்கு மேல் மதுபானசாலைகளை மூடும் போது, ​​அரசுக்கு வரி செலுத்தாமல் பின்வாசல் வழியாக மது விற்பனை செய்கின்றனர்.

இரவு 10 மணிவரையில் மதுபானசாலைகளை திறந்து வைக்க வேண்டும். பல்பொருள் அங்காடிகளுக்கும் பியர் உரிமம் வழங்க வேண்டும். இந்த நாடு முன்னேற வேண்டுமானால் அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.