(கிரியைகள் ஆரம்பம்- 22-03-2023, எண்ணெய்க்காப்பு- 23-03-2023,
குடமுழுக்கும் திறப்பு விழாவும்- 24-03-2023)
இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல சிவத்தலங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பஞ்ச ஈஸ்வரங்கள், தான்தோன்றீஸ்வரங்கள் ஆகியன மிகப் புகழ் பெற்றனவாகும். அவற்றுள் ஈழத் திருநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவத்திருத்தலங்களுள் பழமையும் பெருமையும் சிறப்பும் மிக்கதாக விளங்குவது கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயமாகும். இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்படைக் கோயிலாகவும் விளங்குகிறது. கொக்கட்டிச்சோலை, ஒட்டுசுட்டான் ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் தாமாகத் தோன்றிய சுயம்புலிங்கம் அமையப் பெற்றிருப்பதனால் இவ்வாலயங்கள் இரண்டும் தான்தோன்றீஸ்வரங்கள் என அழைக்கப்படுகின்றன. கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயம் கி.பி 4 ஆம் நூற்றாண்டில் (மட்டக்களப்பு) மண்முனைப் பெருநிலப்பரப்பை ஆட்சி செய்த கலிங்க இளவரசி உலகநாச்சியின் காலத்தில் இருந்து இதன் வரலாறு ஆரம்பமாகிறது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவர். பின்னர் 13 ஆம் நூற்றாண்டில் பொலனறுவையைத் (தோப்பாவை) தளமாகக் கொண்டு ஈழத்தின் பெருநிலப் பரப்பை ஆட்சி செய்த கலிங்க மாகோன் காலத்தில் இத்தலத்தை முதன்மைப்படுத்தித் தொண்டூழியம் வகுத்துப் பல சீர்வரிசைகளையும் வழங்கினான் என வரலாறு சுட்டி நிற்கின்றது.
மண்முனை அரசி உலகநாச்சியின் கட்டளையின் பேரில் கொக்கட்டிச்சோலைக் காட்டுப் பிரதேசத்தை வெட்டித் துப்பரவு செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கொக்கட்டி மரமொன்றின் வெட்டு வாயிலில் இருந்து குருதி வடிவதைக் கண்ட பணியாளர்கள் அரசியிடம் முறையிடுகின்றனர். அரசி வந்து பார்த்த போது மரத்தின் வெட்டு வாயிலுக்குள் சிவலிங்கம் ஒன்று தோன்றி இருப்பதைக் கண்டு பரவசமடைந்து பந்தலிட்டு வழிபாடு செய்தலுக்குரிய ஏற்பாடுகளை முன்னெடுத்ததாகவும், பின்னர் சிறிய ஆலயம் அமைத்து வழிபாடு செய்ததாக வரலாறு வெளிப்படுத்துகின்றது. சுயம்பு லிங்கமொன்று ஆரம்பத்தில் கடவுளர்களுக்கும் பின்னர் தேவர்களுக்கும் அதன் பின்னர் முனிவர்களுக்கும் காட்சியளித்து இறுதியாகவே மனிதர்களுக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். சுயம்பு லிங்கமொன்று எப்படி, எவ்வாறு, எங்கிருந்து தோன்றியது என்பதை ஆய்வு செய்ய முடியாது. அது வெளிப்படுத்தப்பட்ட தினத்தில் இருந்தே ஆய்வுக்குட்படுத்தப்படும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அது தோன்றியிருக்கலாம். அந்தவகையில் கலிங்கத்து இளவரசி உலகநாச்சி தேவியின் மூலம் வெளிப்படுத்தப்படும் என்ற சிவனின் கட்டளைக்கு இணங்க சிவபக்தையும் வீரசைவருமாகிய உலகநாச்சிக்குக் காட்சி கொடுத்திருக்கின்றார். இராம - இராவண யுத்தத்தின் பின்னர் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரரைத் தரிசித்த இராமர் தான்தோன்றீஸ்வரரையும் தரிசித்திருக்கக்கூடும். அதற்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. அதேபோல் இலங்கை வேந்தன் இராவணன் கூடத் தரிசித்திருக்கலாம். அதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இவை யாவும் ஆய்வு செய்யப்படவேண்டிய விடயங்களாகும்.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வெளிப் பிரகாரத்தில் இலங்கை சிவபூமி அறக்கட்டளையினரால் சிவபூமி திருமந்திர அரண்மனை அமைக்கப்பட்டிருப்பது உலகப் புகழ் பெற்ற ஒரு நிகழ்வாகும். இவ்வரண்மனை 24-03-2023 ஆந் திகதி வெள்ளிக் கிழமை மாலை 4.00 மணி சுபமுகூர்த்த வேளையில் திறந்து வைக்கப்பட இருக்கிறது. திருமூலர் சிவபூமி என அழைத்த ஈழத் திருநாட்டில் இவ்வரண்மனை உலகின் முதன் முதலாக அமைக்கப்பட்டிருக்கிறது. திருமந்திர அரண்மனையின் மூலமூர்த்தியாகிய சிவலிங்கப் பெருமான் கருங்கற் கோயிலில் பிரதிஸ்டை செய்யப்பட்டு இருக்கின்றார். திருமூலரின் மூவாயிரம் பாடல்களும் உளி கொண்டு கருங்கல்லில் பொழியப்பட்டிருக்கிறது. அத்தோடு கருங்கல்லில் பொழியப்பட்ட 108 சிவலிங்கங்கள் அரண்மனையினுள் தாபிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கை சிவபூமி அறக்கட்டளையினரால் பல கோடி ரூபா செலவில் அதன் தலைவர் செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. உண்மையில் அவர்களால் உலக இந்துக்களுக்குப் புகழும் பெருமையும் கிடைக்கிறது.
காலத்தால் அழியாதவாறு கருங்கற்களில் மூவாயிரம் திருமந்திர பாடல்களையும் பாரதிபுரத்தைச் சேர்ந்த வினோத் என்ற கலைஞர் தனது கையினால் உளி கொண்டு செதுக்கி இருக்கிறார். செதுக்கப்பட்ட கற்கள் யாவும் சிவபூமி திருமந்திர அரண்மனையில் பதிக்கப்பட்டிருக்கின்றன. இது போன்ற செயற்கரிய சைவப்பணிகளை இலங்கை சிவபூமி அறக்கட்டளையினர் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதேபோல் நாவற்குழியில் திருவாசக அரண்மனை, சிவன் சிலைகள், முதியோர் இல்லங்கள், அடியார் தங்கும் மடங்கள் ஆகிய பலவற்றை அமைத்திருக்கின்றனர். இச்சைவப் பணிக்காக அதன் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் தன்னை அர்ப்பணித்து அயராது செயற்பட்டு வருகின்றார்.
இந்துக்கள் மத்தியில் லிங்க வழிபாடு மிக மிகப் பழையது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டது. சிவனின் உருவத் திருமேனிக்கு அடையாள உருவமாக விளங்குவது சிவலிங்கமாகும். உலகமும் ஆன்மாக்களும் தோன்றுவதற்கும், ஒடுங்குவதற்கும் ஆதாரமாக அமைவது. சிவலிங்கத்தின் மேற்பாகம் சிவனையும், அகன்ற கீழ்ப்பாகமாகிய ஆவுடையார் சக்தியையும் குறிக்கிறது. சிவலிங்கத்தை அபிசேகம் செய்யும்போது தீர்த்தம் வெளியேறும் கோமுகி வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமைந்திருப்பதே ஆகம விதியாகும். பரவெளி அல்லது ஞானகாசம் என அழைக்கப்படும் சிவலிங்கத்தின் மேற்பகுதி சிவனின் முப்பத்தாறு தத்துவங்களும் (சிவதத்துவம்-5, வித்தியா தத்துவம்- 7, ஆன்ம தத்துவம்- 24) கலந்த வடிவமாக விளங்குகிறது. சுயம்பு லிங்கத்தையும் விட விநாயகர், சுப்பிரமணியர் வழிபட்ட கானலிங்கம், பிரம்மா, விஷ்னு, ருத்திரன், இந்திரன் முதலான தேவர்கள் வழிபட்ட தைவிகலிங்கம், அகத்தியர் முதலிய இருடிகள் வழிபட்ட ஆரிடலிங்கம், இராட்சர்கள் வழிபட்ட தாட்சதலிங்கம், அசுரர்கள் வழிபட்ட அசுரலிங்கம், ஆன்மாக்கள் வழிபட்ட ஆன்மார்த்தலிங்கம், ஷனிகலிங்கம், பரார்த்தலிங்கம், பூநூல் தரித்து, விரதமிருந்து, ஓமகுண்டத்தில் வைத்தெடுத்து, வீரசைவக் குருவின் ஆசியுடன் வழங்கப்படும் இட்டலிங்கம்(வீரசைவத்தைக் கடைப்பிடிக்கும் லிங்கதாரிகள் அணிவது) ஆகியனவாகும். இங்கு இட்டலிங்கத்தைத் தினமும் பூசை செய்து தனது மார்பில் அணிந்திராத எவரும் வீரசைவர்களாகக் கொள்ளப்படமாட்டார்கள். கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரம் இலங்கையில் வீரசைவ மரபினைப் பேணிப் பூசை செய்யும் ஆலயமாகக் கொள்ளப்படுகிறது.
சித்தர்களுள் ஒருவரான திருமூலர் உலகப் புகழ் பெற்ற மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரத்தைப் பாடியிருக்கின்றார். பத்தாம் திருமுறையாகிய திருமந்திரம் சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் பற்றியும் விரிவான விளக்கமளிக்கிறது. 2411 வது பாடலில்
'ஆய பதிதான் அருட் சிவலிங்கமாம்
ஆய பசுவும் அடலேறென நிற்கும்
ஆய பலிபீட மாகுநற் பாசமாம்
ஆய அரநிலை யாய்ந்து கொள்வார்க்கே'
என்ற பாடல் முப்பொருள்களைச் சுருக்கமாக விளக்குகிறது. திருமந்திரம் என்பது நினைத்தவர்களுக்கு மேலான பலனைத் தருவது என்பது பொருளாகும். ஈழத்தைச் சிவபூமி எனப்பாடிய திருமூலரின் முத்திப் பேறளிக்கத்தக்க மூவாயிரம் பாடல்களும் சிவபூமி திருமந்திர அரண்மனையில் பொழியப்பட்டிருக்கின்றன.
சிவபூமி- திருமந்திர அரண்மனையின் சிறப்புக்களாக மூலமூர்த்தியாகிய முகலிங்கப் பெருமான் கருங்கற் கோயிலில் எழுந்தருளிக் காட்சியளிக்கின்றார். அத்தோடு திருமூலரின் மூவாயிரம் திருமந்திரங்களும் கையினால் உளி கொண்டு கருங்கல்லில் செதுக்கப்பட்டுக் காட்சியளிக்கின்றன. மேலும் கருங்கல்லில் உருவாக்கப்பட்ட 108 சிவலிங்கங்களும் அரண்மனைப் பிரகாரத்தினுள் பிரதிஸ்டை செய்யப்பட்டு, அடியார்கள் அனைவரும் தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இத்ததைகைய பெருமைமிகு சிறப்புக்கள் யாவும் உலக இந்துக்களுக்காக சிவபூமி அறக்கட்டளையினரால் வெகு சிறப்பாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இச்செயலுக்காக என்றென்றும் இந்துக்கள் நன்றிக் கடன்பட்டவர்களாவர்.
சிவபூமி- திருமந்திர அரண்மனையின் சிறப்புக்களாக மூலமூர்த்தியாகிய முகலிங்கப் பெருமான் கருங்கற் கோயிலில் எழுந்தருளிக் காட்சியளிக்கின்றார். அத்தோடு திருமூலரின் மூவாயிரம் திருமந்திரங்களும் கையினால் உளி கொண்டு கருங்கல்லில் செதுக்கப்பட்டுக் காட்சியளிக்கின்றன. மேலும் கருங்கல்லில் உருவாக்கப்பட்ட 108 சிவலிங்கங்களும் அரண்மனைப் பிரகாரத்தினுள் பிரதிஸ்டை செய்யப்பட்டு, அடியார்கள் அனைவரும் தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இத்ததைகைய பெருமைமிகு சிறப்புக்கள் யாவும் உலக இந்துக்களுக்காக சிவபூமி அறக்கட்டளையினரால் வெகு சிறப்பாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இச்செயலுக்காக என்றென்றும் இந்துக்கள் நன்றிக் கடன்பட்டவர்களாவர்.