பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் குறித்த புதிய சட்டமூலம் விரைவில் : நீதி அமைச்சர்!



பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியின் கெளரவத்தைப் பாதுகாக்காவிடின், அந்த உறுப்பினரின் உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கு சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

“பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை குறித்து நாட்டு மக்களிடம் பல விமர்சனங்கள் உள்ளன. இது நியாயமான விமர்சனம். கடந்த காலத்தில் அந்த பொறுப்பை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றாததால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். அவற்றில் அமைச்சரவையில் பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளோம். பாராளுமன்ற தரநிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் புதிதாக சட்டமூலம் தாக்கல் செய்யப்படும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியின் கௌரவத்தை காக்காத வகையில் செயற்பட்டால் மற்றும் அவர் சட்டத்திற்கு புறம்பாக ஏதாவது செய்திருந்தால் சுயாதீனமாக நியமிக்கப்படும் குழு ஊடாக அந்த உறுப்பினருக்கு தண்டனை வழங்கப்படும். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யும் வகையில் இந்த சட்டமூலத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.