மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் பலி!


மட்டக்களப்பில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளரான சிறிபாலு வியாழக்கிழமை (21) செங்கலடி பதுளை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி பலியாகியுள்ளார்.

செங்கலடி, கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த சிவில் செயற்பாட்டாளரான தம்பிநாயகம் சிறிபாலு வயது (54) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதியில் புலையவெளி என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே இவர் பலியாகியுள்ளார் .

இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்காக நடைபெற்ற போராட்டங்கள் முதல் கொண்டு பல சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டவர் என்பதோடு மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பணியாற்றி வருகிறார்.

கரடியனாறு பகுதியில் இருந்து பதுளை வீதி வழியாக செங்கலடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதிய போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடாத்தியதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்