உத்தேச தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது : உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் !


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைப்பதற்கான, முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான குழுவின் அவதானிப்புகள் அடங்கிய அறிக்கை அமைச்சிடம் இன்று (26) கையளிக்கப்பட்டதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அது தொடர்பான அறிக்கையை ஆராய்ந்த பின்னர் தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை இவ்வருடத்தில் நிறுவ முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்,

2021-2022 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் 17 பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த வருடங்களில் திட்டமிட்டபடி மாணவரை இணைக்கும் பணி நடக்கவில்லை என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை உறுதிப்படுத்த உரிய ஆவணங்கள் என்னிடம் உள்ளன.

கடந்த காலத்தில் ஏற்பட்ட சில சிக்கல்களினால் சில பல்கலைகழகங்களின் இறுதியாண்டு மாணவர்கள் சரியான நேரத்தில் படிப்பை முடிக்க முடியாமல் இன்னும் பல்கலைகழகங்களில் தங்கி உள்ளனர். விரிவுரைகள் மற்றும் நடைமுறைக் கற்கைகளை நடத்துவதற்குத் தேவையான வகுப்பறை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன.

ஆனால் இந்த சிக்கல்களை தீர்க்க சில மாற்று வழிகளை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். இரத்மலானை பிரதேசத்தில் இருந்து மகாவலிக்கு சொந்தமான கட்டிடமும், களனி பிரதேசத்தில் இருந்து அரசாங்கத்திற்குச் சொந்தமான பல கட்டிடங்களும் எமக்கு கிடைத்துள்ளன. குறித்த கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டவுடன் இந்தப் பிரச்னைகள் தீரும் என நம்புகிறோம்.

மேலும் இங்கு விசேடமாக குறிப்பிட வேண்டிய ஒன்று உள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவும் அமைக்கப்பட உள்ளது.

இது தொடர்பில், முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அவதானிப்புகள் அடங்கிய அறிக்கை இன்று (26) அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

அந்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு, இந்த ஆண்டுக்குள் தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைப்பது சாத்தியப்படும் என்று நம்புகிறேன். இது இந்நாட்டின் பல்கலைக்கழக முறைமை மாற்றத்திற்கு இன்றியமையாத நிறுவனம் என்பதைக் கூற வேண்டும்.” என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் மேலும் தெரிவித்தார்.